வவுனியாவில் தாதியர் கல்லூரி நிர்வாகிகள் 5 பேர் கைது!!

349
வவுனியாவில் உள்ள தனியார் தாதியர் கல்லூரி ஒன்றில், மாணவர்களிடம் லட்சக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு மோசடி செய்த குற்றச்சாட்டின் கீழ், அந்நிறுவனத்தின் நிர்வாகிகள் ஐந்து பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வவுனியா, வைரவபுளியங்குளம் 7ஆம் ஒழுங்கையில் அமைந்துள்ள தனியார் தாதியர் கல்லூரி ஒன்றில், தாதியர் கற்கைநெறியை பயில்வதற்காக பெருமளவிலான மாணவர்கள் இணைந்துள்ளனர்.
இதன்போது, ஒவ்வொரு மாணவரிடமிருந்தும் தலா ஒரு இலட்சத்திற்கும் அதிகமான ரூபாய் பணம் தவணை முறையில் அறவிடப்பட்டுள்ளது.

கற்கைநெறியை ஆரம்பிக்கும் போது, இதன் முடிவில் அரச அங்கீகாரமுடைய TVEC (தொழிற்கல்வி ஆணைக்குழு)சான்றிதழ் வழங்கப்படும் என கல்லூரி நிர்வாகத்தினரால் மாணவர்களுக்கு உறுதியளிக்கப்பட்டுள்ளது.

எனினும், மாணவர்கள் தங்களது கற்கைநெறியை வெற்றிகரமாக முடித்து நீண்ட நாட்களாகியும், வாக்குறுதியளிக்கப்பட்ட அரச அங்கீகாரமுள்ள சான்றிதழ்கள் அவர்களுக்கு வழங்கப்படவில்லை எனத் தெரிகிறது. இதனால் ஏமாற்றமடைந்த மாணவர்களுக்கும் கல்லூரி நிர்வாகத்திற்கும் இடையே இன்று (15.06.2026) கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு, அப்பகுதியில் பெரும் குழப்பநிலை நிலவியது.

நிலைமை கட்டுப்பாட்டை மீறிச் சென்றதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து, மாணவர்களை ஏமாற்றி பண மோசடி செய்த குற்றச்சாட்டின் கீழ் அங்கிருந்த கல்லூரி நிர்வாகிகள் ஐந்து பேரை பொலிஸார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டுள்ள ஐந்து நிர்வாகிகளும் நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.