
வட்ஸ்அப் செயலி தனது பயனர்களின் தனிப்பட்ட பாதுகாப்பு மற்றும் தனியுரிமையை அதிகரிக்கும் நோக்கில், மொபைல் எண்களை மறைத்துவிட்டு ‘பயனர் பெயர்’ (Username) மூலம் மட்டுமே மற்றவர்களுடன் தொடர்புகொள்ளும் புதிய வசதியை அறிமுகப்படுத்தவுள்ளது.
உலகம் முழுவதும் உள்ள சுமார் 3 பில்லியன் வாட்ஸ்அப் பயனர்கள் அடுத்த சில மாதங்களுக்குள் இந்த அம்சத்தை பயன்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த வசதி அனைவருக்கும் கட்டாயமாக்கப்படவில்லை. விருப்பமுள்ளவர்கள் மட்டுமே தங்களுக்குத் தேவையான ‘Username’-ஐத் தேர்ந்தெடுத்து பதிவு செய்து கொள்ளலாம்.
பயனர்கள் தாங்கள் தேர்ந்தெடுத்த பயனர் பெயரை (Username) எந்த நேரத்திலும் நீக்கவோ அல்லது மாற்றியமைக்கவோ முடியும். ஒரு பயனர் பெயருக்காக அதிகபட்சமாக 35 எழுத்துக்கள் அல்லது குறியீடுகளை மட்டுமே பயன்படுத்த முடியும்.
பிரபலமான அரசியல்வாதிகள் அல்லது பொது நபர்களின் பெயர்களை மற்றவர்கள் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
வாட்ஸ்அப் கணக்கொன்றைத் தொடங்குவதற்கு (Account Activation) தொடர்ந்து தொலைப்பேசி எண் கட்டாயமாக இருக்கும். எனினும், இந்த புதிய ‘Username’ அம்சம் நடைமுறைக்கு வந்த பின்னர், மற்றவர்களால் உங்களுடைய மொபைல் எண்ணைப் பார்க்க முடியாது.
குறிப்பாக, வாட்ஸ்அப் குரூப்களில் (Group Chats) இருக்கும் முகம் தெரியாத நபர்களுடன் தங்களின் தனிப்பட்ட மொபைல் எண்களைப் பகிர்ந்து கொள்ள விரும்பாதவர்களுக்கு இந்த அம்சம் கூடுதல் பாதுகாப்பை வழங்கும் என வாட்ஸ்அப் நிறுவனத்தின் சிரேஸ்ட அதிகாரி அலிஸ் நியூட்டன்-ரெக்ஸ் தெரிவித்துள்ளார்.





