வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையினால் 18 கற்குவாரிகளுக்கும் ஓர் கிரவல் குவாரிக்கும் அனுமதி : வருமானமீட்டும் சபை வீதிகளை செப்பனிடுவதில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு!!

143

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 18 கற்குவாரிகள் மற்றும் ஒரு கிரவல் குவாரிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், அவற்றின் மூலம் சபை கணிசமான வருமானத்தை ஈட்டியும், சேதமடைந்த வீதிகளைப் புனரமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.

சபையினால் நீண்டகாலமாக இயங்கி வந்த 15 கற்குவாரிகளுக்கான அனுமதிகள் புதுப்பிக்கப்பட்டுள்ளதுடன், 3 புதிய கற்குவாரிகளுக்கு புதிதாக அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன.

பெரியகோமரசங்குளம், நொச்சிமோட்டை, ஆசிகுளம், மருதங்குளம், கதிரவேலர்பூவரசங்குளம், பம்பைமடு, கொந்தகாரன்குளம், நாவற்குளம் மற்றும் விநாயகபுரம் என புதுப்பிக்கப்பட்ட 15 கற்குவாரிகளின் பகுதிகளாகும்

மேலும் விநாயகபுரம் , இளமருதங்குளம் பகுதியில் 02 குவாரிகளும், மகிழங்குளம் பகுதியில் 01 குவாரியும் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன அத்துடன் கல்வீரன்குளம் பகுதியில் கிரவல் குவாரிக்குரிய அனுமதி புதுப்பித்து வழங்கப்பட்டுள்ளது.

இக்குவாரிகளுக்கான ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டு, கனரக வாகனங்கள் மூலம் வீதிகள் ஊடாக கற்களும் கிரவல்களும் ஏற்றிச் செல்லப்படுகின்றன. இவ்வாறு குவாரிகளில் இருந்து கொண்டு செல்லப்படும் ஒரு கியூப் (1 Cube) கல்/கிரவல் என்ற அடிப்படையில் ஒப்பந்ததாரர்களிடமிருந்து பிரதேச சபையினால் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகின்றது.

இந்தக் கட்டணமானது, குவாரி வாகனங்கள் பயன்படுத்தும் வீதிகளைப் பராமரிப்பதற்கும், கனரக வாகனப் போக்குவரத்தால் ஏற்படும் பாதிப்புகளைச் சீர்செய்வதற்கும் என்றே சபையினால் வசூலிக்கப்படுகிறது. ஆனால், நடைமுறையில் வீதிகளைப் புனரமைக்கும் பணிகளை பிரதேசசபை முன்னெடுக்கவில்லை என குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது

கனரக வாகனங்களின் தொடர்ச்சியான போக்குவரத்தால் கிராமிய வீதிகள் பலவும் முற்றாக சேதமடைந்து, குன்றும் குழியுமாகக் காட்சியளிப்பதுடன், பொதுமக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் இதனால் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

குவாரிகள் மூலம் பிரதேச சபைக்கு கணிசமான வருமானம் ஈட்டப்பட்டு வரும் நிலையில், சபையினர் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் நலன் சார்ந்த விடயங்களிலும் காட்ட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சேதமடைந்துள்ள வீதிகளை உடனடியாக மீள்புனரமைப்பு செய்து, மக்களின் போக்குவரத்தை சீர்செய்து தருவதற்கு தவிசாளரும் சபையும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.