கோர விபத்தில் 2 இளைஞர்கள் பலி : ஆபத்தான நிலையில் மேலும் இருவர்!!

154

தங்காலை – மாத்தறை பிரதான வீதியின் வெல்லமடம பகுதியில் நேற்று பிற்பகல் சம்பவித்த கோர விபத்தில் 2 இளைஞர்கள் உயிரிழந்துள்ளார். நேற்று பிற்பகல் 03.50 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மாத்தறையில் இருந்து தங்காலை நோக்கிச் சென்ற டிபென்டர் ஜீப் ஒன்றும், தங்காலையில் இருந்து மாத்தறை நோக்கி சென்ற லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதனால் விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்து இடம்பெற்ற சமயத்தில் டிபென்டர் வாகனத்தில் ஐந்து பேரும், லொறியில் சாரதி மற்றும் உதவியாளர் உள்ளிட்ட இருவர்களும் பயணம் செய்துள்ளனர்.

விபத்தினால் டிபென்டரில் பயணித்த அனைவரும் மற்றும் லொறியில் இருந்த இருவரும் என மொத்தம் ஏழு பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த நிலையில், அவர்களில் தற்போது இருவர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த இருவரில் ஒருவர் டிபென்டர் வாகனத்தின் சாரதியான மாத்தறையை சேர்ந்த 37 வயதுடைய வேதமுல்ல கங்கானம்கே தினேஷ் உதயங்க என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மற்றைய நபர் அதில் பயணித்த 36 வயதுடைய மாத்தறையை சேர்ந்த எஸ்.எம்.வி. சுபாஷ் எனவும் தெரியவந்துள்ளது.

காயமடைந்தவர்களில் மேலும் இருவரின் நிலைமை தொடர்ந்தும் கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பொலிஸாரின் ஆரம்ப விசாரணைகளில், விபத்துக்குள்ளான டிபென்டர் வாகனம் குறித்த இளைஞர் குழுவினால் ஒரு நாள் வாடகை அடிப்படையில் பெற்றுள்ளனர்.

விபத்தினால் டிபென்டர் வாகனத்திற்கும் லொறிக்கும் பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளது. விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.