காதல் தகராறில் இளைஞன் அடித்துக்கொலை: இலங்கை அகதிக்கு பொலிஸ் வலைவீச்சு..!

405

காதலில் ஏற்பட்ட தகராறில், இலங்கை அகதி இளைஞரால் கல்லூரி வாலிபர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

திண்டுக்கல்லை சேர்ந்த பழனியப்பனின் மகன் செல்லபாண்டியன், 22. இவர், ஈரோடு மாவட்டம், கணபதிபாளையம் அருகே அறை எடுத்து தங்கி, விஜயமங்கலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வந்தார்.

இந்நிலையில் செல்லபாண்டியன் மர்மமான முறையில், கொடுமுடி ஈஞ்சம்பள்ளி அகதிகள் முகாம் அருகே உள்ள கிணற்றில், இறந்து கிடந்தார். மலையம்பாளையம் பொலிஸார் இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

விசாரணையில், செல்லபாண்டியனின் தாய்மாமன் மகளுக்கு திருமண பேச்சுவார்த்தை நடந்தது. அந்த பெண்ணை, இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த விஜயனின் மகன் கஜேந்திரன், 23, என்பவர் விரும்பியதாக தெரியவந்தது.

இதில் ஆத்திரமடைந்த, கஜேந்திரனுக்கும், செல்லபாண்டியனுக்கும் தகராறு ஏற்பட்டது. இத்தகராறில் கஜேந்திரன், செல்லபாண்டியனை இரும்பு ஆயுதத்ததால் தாக்கி கொலை செய்து, கிணற்றில் வீசி சென்றது தெரியவந்தது.

தலைமறைவாக இருக்கும் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த கஜேந்திரனை, பொலிஸார் தேடி வருகின்றனர்.

மலையம்பாளையம் பொலிஸ் பொறுப்பதிகாரி சிவக்குமார் கூறியதாவது, காதலில் ஏற்பட்ட தகராறில், இரும்பால் தாக்கியதில் செல்லபாண்டியன் கொலை செய்யப்பட்டார். தலைமறைவாக இருக்கும் கஜேந்திரனை தேடி வருகிறோம், என்றார்.