மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தியது இந்தியா..!

445

indwi

இந்தியா, மேற்கிந்திய தீவுகள், இலங்கை ஆகிய நாடுகள் பங்கேற்கும் முத்தரப்பு கிரிக்கெட் போட்டி, மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வருகிறது. 4-வது போட்டியில் இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகள் நேற்று மோதின. நாணயச்சுழற்சியில் வென்ற மேற்கிந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

இந்திய அணியில் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் சிகார் தவான் களமிறங்கினார்கள். இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இவர்கள் ஜோடியில் இந்திய அணி 123 ஓட்டங்கள் சேர்த்தது. சிறப்பாக விளையாடிய தவான் 69 ஓட்டங்களுடனும், சர்மா 46 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.

அடுத்து வந்த ரெய்னா (10), கார்த்திக் (6), விஜய் (27), சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். மறுமுனையில், அணித்தலைவர் விராட் கோலி அதிரடியாக விளையாடி 102 ஓட்டங்களை எடுத்து, கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். இதில் 13 பவுண்டரி, 2 சிக்சர்கள் அடங்கும். இதனால் இந்திய அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 311 ஓட்டங்கள் எடுத்தது.

இதை அடுத்து 312ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மேற்கிந்திய தீவுகள் அணி ஆட்டத்தை ஆரம்பித்தது. 10 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 56 ஓட்டங்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது.

மழை ஓய்ந்த பிறகு ஆட்டம் 39 ஓவராக குறைக்கப்பட்டது. அதே போல் 274 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் விளையாடிய நடுவரிசை வீரர்கள், நிதானமாக விளையாடத் தவறினார்கள். இதனால் மேற்கிந்திய தீவுகள் அணி 39 ஓவர் முடிவில் அனைத்து விக்கட்டுளையும் இழந்து 171ஓட்டங்ளை மட்டுமே எடுத்தது. எனவே இந்தியா அணி 102 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.