இந்தியா, இலங்கை, மாலைத்தீவுகள் இடையில் கடல் போக்குவரத்து பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகியுள்ளது.
இலங்கை வந்துள்ள இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன், இலங்கையின் பாதுகாப்புத்துறைச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷ, மாலைத்தீவுகள் பாதுகாப்பு அமைச்சர் முகமது நாஜிம் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளனர்.
கடல் பகுதிகளில் கண்காணிப்பு பணிகளைச் செய்வது, கடற்கொள்ளைக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது, கடல் பகுதியை மாசுபடுத்தும் நடவடிக்கைகள் உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகளைத் தடுப்பது போன்ற விஷயங்களில் ஒத்துழைப்பை மேம்படுத்த இம்மூன்று அண்டை நாடுகளும் உடன்பட்டுள்ளன.
இந்தியப் பெருங்கடல் பகுதியில் பாதுகாப்பை மேம்படுத்துவதன் முக்கியத்தை உணர்ந்து தங்களுக்குள் இந்த ஒப்பந்தத்தை இந்த மூன்று நாடுகளும் செய்துகொண்டுள்ளன.
(BBC)