வவுனியா பொலிசார் பக்கச் சார்பாக நடந்து கொண்டதாகவும் நகரசபை உத்தியோகத்தர்களை கைது செய்து தடுத்து வைத்திருந்ததாகவும் தெரிவித்து வவுனியா நகரசபையினர் காலவரையற்ற பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
நேற்று முன்தினம் வவுனியா நகரசபையின் சுகாதார பரிசோதகர் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் சந்தை அமைந்துள்ள நகர பகுதிகளில் நகரசபை அனுமதியின்றி வீதியோர வியாபாரத்தில் ஈடுபட்டவர்களை அகற்றியுள்ளனர். இதன் போது அப் பகுதியில் மரக்கறிகளை கொள்வனவு செய்த இளைஞன் ஒருவர் தனது கையடக்க தொலைபேசியில் அச் சம்பவங்களை படம்பிடித்துள்ளார்.
இதன் போது இருபகுதியினருக்கும் இடையில் வாய்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த இளைஞனை நகரசபை வாகனத்தில் ஏற்றி வவுனியா பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட பொலிசார் இருவரதும் முறைப்பாட்டையும் பதிவு செய்தனர்.
இதன் போது நகரசபையினரால் தான் தாக்கப்பட்டதாக இளைஞன் முறைப்பாடு செய்ததையடுத்து தாக்கப்பட்டிருந்த குறித்த இளைஞனை வவுனியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்ததுடன் தாக்குதல் நடத்தியமை மற்றும் இளைஞனை பிடித்து தமது வாகனத்தில் ஏற்றி கொண்டுவந்தமை தொடர்பில் நகரசபை உத்தியோகத்தர்கள் ஆறு பேரை கைது செய்து தடுத்து வைத்தனர். கைது செய்யப்பட்டவர்கள் 12 மணித்தியாலங்களின் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
பொலிசாரின் இச் செயற்பாட்டை கண்டித்தே நகரசபையினர் இப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் கடமையில் ஈடுபட்டிருந்த நகரசபை உத்தியோகத்தர்களை கடமையை செய்யவிடாது சட்டவிரோதமாக கைது செய்தமை, 12 மணித்தியாலங்களுக்கு மேலதிகமாக உணவு, நீரின்றி தடுத்து வைத்திருந்தமை, கடமைக்கு இடையூறு விளைவித்த நபர் மீது பொலிசார் நடவடிக்கை எடுக்காது விடுவித்தமை, உத்தியோகத்தர்களை அச்சுறுத்தியமை மற்றும் அவதித்மை என தமக்கு அநீதிகள் இழைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து சுலோக அட்டைகளை ஏந்தியுள்ளனர்.
இதேவேளை, வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த தாக்குதலுக்குள்ளான இளைஞன் இன்று வீடு திரும்பியுள்ளார்.
இவ் கவனயீர்ப்பு போராட்டதிற்கு ஆதராவாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சிவசக்தி ஆனந்தன், வட மாகாண சபை உறுப்பினர் திரு. தியாகராசா, வவுனியா நகரசபையின் முன்னாள் உபதலைவர் திரு.சந்திரகுலசிங்கம் (மோகன்), வவுனியா வர்த்தக சங்க தலைவர் ராஜேஸ்வரன், வட மாகாண சுகாதார அமைச்சரின் பிரித்தியேக செயலாளர் திரு.சத்தியசீலன், வரியிறுப்பாளர் சங்க தலைவர் திரு.சந்திரகுமார், தமிழ் தேசிய இளைஞர் கழக பிரதிநிதிகள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.
இவ் கவனயீர்ப்பு போராட்டம் தொடர்பாக வட மாகாண சுகாதார அமைச்சரின் பிரித்தியேக செயலாளர் திரு.சத்தியசீலன் அவர்கள் வட மாகாண முதலமைச்சர் கௌரவ சி.வி. விக்னேஸ்வரன் உடன் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு தெரியப்படுத்தியிருந்தார்.
அதனைதொடர்ந்து முதலமைச்சர் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி உரிய நடவடிக்கை எடுப்பதாக வட மாகாண சுகாதார அமைச்சரின் பிரித்தி யேக செயலாளர் திரு.சத்தியசீலன் அவர்களிடம் தெரிவித்தார். அதனை தொடர்ந்து அவர் போராட்டத்தில் ஈடுபட்ட நகரசபை ஊழியர்களிடம் எடுத்துரைத்தார்.
எனினும் தொடர்ந்து நாளைய தினமும் போராட்டம் நடைபெறும் என நகரசபை ஊழியர்கள் தெரிவித்தார்.