முகப்புத்தகத்தில் வரும் ஆபாச இணைப்பை அழுத்தாதீர்கள் : ஓர் எச்சரிக்கைச் செய்தி!!

431

FB

ஆபாசப் புகைப்படங்கள் மற்றும் ஆபாச தகவல்கள் அடங்கிய இணைப்புகளை (லிங்க்) முகப்புத்தக கணக்குகளுக்கு அனுப்புவதன் மூலம் முன்னெடுக்கப்படவிருந்த பாரியதொரு சமுக சீரழிவு, அமெரிக்காவிலுள்ள முகப்புத்தக தலைமையக அதிகாரிகளினால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை கணினி அவசர நடவடிக்கைப் பிரிவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் ரொஷான் சந்திரகுப்தா தெரிவித்தார்.

இவ்வாறான இணைப்புக்கள் கிடைப்பதான ஐந்து முறைப்பாடுகள், இலங்கை கணினி அவசர நடவடிக்கைப் பிரிவுக்கு கிடைத்துள்ளதாகவும் தெரிவித்த சந்திரகுப்தா, முகப்புத்தக கணக்கை பேணுபவர், குறித்த இணைப்பு தொடர்பில் தேடியறியாமல் அதனை அழுத்துவதன் மூலம் தேவையற்ற பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கிறார் என்றார்.

அத்துடன், இந்த இணைப்பை அழுத்துவதால் கணக்கை பேணுபவரின் தொடர்பில் உள்ள ஏனைய பின்பற்றுனர்களின் கணக்குகளுக்கும் அந்த ஆபாச இணைப்பு போய் சேமிக்கப்படுகிறது.

இது தொடர்பில் முகப்புத்தக தலைமையகத்துக்கு இலங்கை கணினி அவசர நடவடிக்கைப் பிரிவினால் அறிவிக்கப்பட்டது.

இருப்பினும், இந்த பிரச்சினை ஏனைய பல நாடுகளும் எதிர்கொண்டு வந்திருக்கின்றன. இறுதியில், இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க முகப்புத்தக தலைமையகம் நடவடிக்கை எடுத்து அதனை தடுத்து நிறுத்தியுள்ளது.

இந்த பிரச்சினையை கவனத்திற்கொண்டு, இனிவரும் காலங்களிலாவது முகப்புத்தக்க பாவனையாளர்கள் கவனமாக நடந்துகொள்ள வேண்டும். எக்காரணம் கொண்டும், தாங்கள் அறிந்திராத இணைப்புக்களை அழுத்தி பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டாம் என்று சந்திரகுப்தா கேட்டுக்கொண்டார்.