வவுனியாவில் 10 வயது சிறுவன் கொலை தொடர்பில்18 வயது இளைஞன் கைது!!

347

Capture

வவுனியாவில் 10 வயது சிறுவன் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டமை தொடர்பில் 18 வயது இளைஞன் ஒருவர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா, சாம்பல் தோட்டம் பகுதியில் கடந்த மாதம் 9 ஆம் திகதி சந்திரசேகரன் சஞ்சய் என்ற 10 வயது சிறுவன் பகல் வேளையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் வீட்டின் பின்புறமாகவிருந்து சடலமாக மீட்கப்பட்டான்.

இது தொடர்பாக வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சண் அபேயவர்த்தன தலைமையிலான 5பேர் கொண்ட பொலிஸ் அணி பல்வேறு கோணங்களில் பலரிடமும் வாக்கு மூலங்களை பெற்று விசாரணைகளை நடத்தி வந்தது.

இந் நிலையில் இக் கொலையுடன் தொடர்புடையவர் என கொல்லப்பட்ட சிறுவனின் உறவினரான அருகில் உள்ள வீட்டில் வசிக்கும் 18 வயது இளைஞன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான்.

கொல்லப்பட்ட சிறுவனின் வீட்டில் இருந்த உண்டியலில் பணத்தை திருடச் சென்ற சமயம் அதனை கண்ட சிறுவன் வீட்டாரிடம் சொல்லப் போவதாக கூறியதையடுத்து அருகில் இருந்த கத்தியை எடுத்து சிறுவனின் கழுத்துப் பகுதியில் அறுத்ததினால் குறித்த சிறுவன் மரணமடைந்துள்ளான்.

இதேவேளை, மரணமடைந்த சிறுவனின் தாய்க்கும் இக் கொலையுடன் தொடர்பு இருப்பதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டு இருந்தன. ஆனால் இக் கொலைக்கும் அச் சிறுவனின் தாய்க்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட இளைஞன் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.