ரஷ்யாவில் பின்தங்கிய நகரொன்றிலிருந்த கைவிடப்பட்ட ஆய்வுகூடமொன்றிலிருந்து கண்ணாடி ஜாடிகளில் அடைக்கப்பட்டு மம்மியாகிய நிலையில் காணப்பட்ட குழந்தைகளின் எச்சங்களும் மனித உடல் உறுப்புகளும் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேற்கு சைபீரியாவில் தொபோல்ஸ்க் எனும் இடத்திலுள்ள கைவிடப்பட்ட நோயியல் ஆராய்ச்சி ஆய்வுகூடத்திலிருந்து மேற்படி எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டமை பிராந்திய மக்கள் மத்தியில் பெரிதும் அதிர்ச் சியைத் தோற்றுவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பல சடல எச்சங்களில் பரிசோதனை செயற்கிரமங்கள் மேற்கொள்ளப்பட்டமைக்கு சான்றாக காய அடையாளங்கள் காணப்பட்டன. அந்த குழந்தைகளின் உடல்களில் சில சுமார் 3 வருடங்களுக்கு முன்னர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. மேற்படி உடல்கள் அடைக்கப்பட்டிருந்த ஜாடிகளில் 2012 ஆம் ஆண்டு ஜனவரி என திகதி குறிப்பிடப்பட்டிருந்துள்ளது.
தொபோல்ஸ்க் பிராந்தியத்தைச் சேர்ந்த மருத்துவக் கல்லூரி மாணவர் ஒருவராலேயே இந்த கைவிடப்பட்ட ஆய்வுகூடத்திலிருந்த எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அந்த குழந்தைகளின் எச்சங்களுக்கு அருகில் அந்த குழந்தைகளது குடும்ப விபரங்களை உள்ளடக்கிய ஆவணங்களும் காணப்பட்டுள்ளன.இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.