வவுனியா – பேயாடி கூழாங்குளம் காணிப் பிரச்சனைக்கு விரைவில் தீா்வு!!

253

vv

வவுனியா – பேயாடி கூழாங்குளம் காணிப் பிரச்சனை குறித்து வவுனியா பிரதேச செயலாளருடன் கலந்துரையாடி முடிவு எடுக்கப்படும் என வடமாகாண சுகாதார மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் அமைந்துள்ள அமைச்சின் அலுவலகத்தில் பேயாடி கூழாங்குளம் காணிப் பிரச்சனை தொடர்பில் அப்பகுதி மக்கள் மற்றும் திருமறைக் கலாமன்றத்தினருடன் கலந்துரையாடிய போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

வவுனியா – நொச்சிமோட்டை, பேயாடி கூழாங்குளம் பகுதியில் உள்ள பொதுத் தேவைக்கான நிலத்தினை வவுனியா பிரதேச செயலாளர் திருமறைக் கலாமன்றம் என்ற அமைப்புக்கு வழங்கியுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை மீட்டுத் தருமாறு கோரி பேயாடி கூழாங்குளம் மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றினை அண்மையில் மேற்கொண்டிருந்தனர்.

இந்நிலையில் குறித்த காணியில் கட்டட நிர்மாணத்திற்கான ஆரம்ப வேலைகளைச் செய்ய அப்பகுதி மக்கள் தடையாக இருப்பதாக தெரிவித்து திருமறைக் கலாமன்றத்தினரால் பொலிஸ் நிலையத்தில் மக்களுக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டது.

இதனையடுத்து இரு பகுதியினரும் இது தொடர்பில் வடமாகாண சுகாதார மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் ப.சத்தியலிங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

இரு பகுதியினரையும் அழைத்து கலந்துரையாடல் ஒன்று அமைச்சின் உப அலுவலகத்தில் இடம்பெற்றது.

இருதரப்பினருக்கும் இடையிலான கலந்துரையாடலை அடுத்து குறித்த பிரச்சினையை தீர்ப்பதற்கு வவுனியா பிரதேச செயலாளருடன் கலந்துரையாடிய பின்னரே தீர்க்க முடியும் எனவும் இது தொடர்பில் தாம் கலந்துரையாடுவதாகவும் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.