வவுனியா, கனகராயன்குளம் பகுதியில் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் மரணமடைந்ததாக சந்தேகிக்கப்பட்ட நிலையில் தோண்டி எடுக்கப்பட்ட சரண்ஜாவின் சடலம் உடல்கூற்று பரிசோதனையின் பின் மீண்டும் புதைக்கப்பட்டது.
கடந்த பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்த 16 வயதான செல்வராஜா சரண்ஜா என்ற இச் சிறுமியின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும், சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும் உறவினர்கள் சந்தேகம் வெளியிட்டதையடுத்து சட்டத்தரணிகள் ஊடாக வவுனியா நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
சிறுமியின் மரணம் தொடர்பாக வைத்திய அறிக்கையிலும் குழப்பமான நிலை காணப்பட்டிருந்தது.
இதன் அடிப்படையில் நீதிமன்றத்தினால் மார்ச் மாதம் 6 ஆம் திகதி சடலத்தை தோண்டியெடுத்து கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு மருத்துவ பரிசோதனைக்காக அனுப்புமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இதற்கமைய வவுனியா மாவட்ட நீதிவான் முகமட் ரிஸ்வான், யாழ் மாவட்ட சட்ட வைத்திய நிபுணர் ருத்திரபதி மயூரதன், கனகராயன்குளம் பொலிஸார் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டு உடல் கூற்று பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பப்பட்ட சடலம் பரிசோதனை முடிவடைந்த நிலையில் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டு இன்றைய தினம் கனகராயன்குளம் மயானத்தில் மீண்டும் புதைக்கப்பட்டது.
இது தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் 18 ஆம் திகதி வவுனியா நீதிமன்றில் இடம்பெறவுள்ளதுடன் அதன் போது உடல்கூற்று பரிசோதனை அறிக்கை மன்றில் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.