நடுவானில் பறக்கும் போது தன்னைத்தானே சீரமைத்துக் கொள்ளக் கூடிய விமான இறக்கை தொழில்நுட்பத்தை பிரித்தானிய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
மேற்படி இறக்கை தொழில்நுட்பத்தின் கண்டுபிடிப்பு குறித்து லண்டனில் இடம்பெற்ற ரோயல் சபைக் கூட்டத்தில் பிரிஸ்டல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழுவால் முன்வைக்கப்பட்டது.
நடுவானில் பறவைகள் விமானங்களில் மோதுவதால், அவற்றின் (விமானங்களின்) இறக்கைகள் சேதமடைந்து அவை விபத்துக்குள்ளாவது வழமையாகவுள்ளது.
இந்நிலையில் விஞ்ஞானிகளால் மூன்று வருட கால ஆராய்ச்சியையடுத்து உருவாக்கப்பட்டுள்ள புதிய தொழில்நுட்பமானது, நடுவானில் பறக்கும் போது விமானத்தின் இறக்கை சேதமடைந்தால் சேதமடைந்த பகுதிக்குள் சுயமாக காபன் நாரை கசியச் செய்து பின்னர் அதனை வன்மையாக்குகிறது. இதனால் விமானத்தின் இறக்கையின் சேதமடைந்த பகுதி உடைந்து விழுவது தடுக்கப்படுகிறது.
இந்த தொழில்நுட்பம் எதிர்காலத்தில் சுயமாக சீரமைக்கக் கூடிய நகப் பூச்சுகள், பந்தாட்ட மட்டைகள் என்பவற்றின் உருவாக்கத்தை சாத்தியமாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.