
உத்தரப்பிரதேசத்தில் மாநில மருத்துவமனைகள் மிகப்பெரிய அளவுக்கு ஊழல் செய்திருப்பது தணிக்கை ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பிரசவிக்கும் பெண்களின் உடல்நலனை பாதுகாக்க மத்திய அரசு, ஜனனி சுரக்ஷா யோஜனா திட்டத்தின் கீழ் பெண்களுக்கு நிதியுதவி வழங்குகிறது.
இந்நிலையில், இந்த திட்டத்தில் உத்தரப்பிரதேச மாநில மருத்துவமனைகள் மிகப்பெரிய அளவுக்கு ஊழல் செய்திருப்பது தணிக்கை ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் வசிக்கும் 60 வயது மூதாட்டி ஒருவர் 10 மாதத்தில் 5 முறை குழந்தை பெற்றதாக ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது. மேலும், இதே போல் ஆஷா தேவி என்ற பெண்மணி 4 மாதங்களில் 3 முறை பிரசவித்ததாக கூறி ஒவ்வொரு முறையும் தலா 1400 ரூபா மோசடியாக பெறப்பட்டுள்ளது.
இதுமட்டுமல்லாமல், 12 வருட காலமாக கர்ப்பமே தரிக்காத பெண் கர்ப்பமடைந்ததாக கூறி பணம் பெறப்பட்டுள்ளதும் தணிக்கை ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அந்த பெண், கடந்த ஆகஸ்ட் 2011ம் ஆண்டு பிரசவித்ததாக கூறி பணம் பெறப்பட்டுள்ளது. ஆனால் விசாரணையில் கடந்த 12 வருடங்களாக அவர் குழந்தையே பெறவில்லை என்று தெரிய வந்துள்ளது.
அங்குள்ள பாண்டி ஆரம்ப சுகாதார மையத்தில் மட்டும் இது போன்று 200 முறை மோசடியாக பணம் பெறப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் இது குறித்து விசாரிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளதோடு, அங்கு பணிபுரிந்த 5 ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.





