இன்றையதினம் வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் ஒழுங்கமைப்பில், அரசியல் கைதிகள் மற்றும் காணாமல் போனோரின் உறவுகள் துண்டுப்பிரசுர விநியோகத்தினை வவுனியா நகர் எங்கும் மேற்கொண்டனர்.
இதில் பிரஜைகள் குழு தலைவர் தேவராஜா, முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு சிவசக்தி ஆனந்தன், முன்னாள் வவுனியா நகர சபையின் உப நகரபிதா திரு க.சந்திரகுலசிங்கம் (மோகன்) , தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவர் திரு சு.காண்டீபன், பொருளாளர் த.நிகேதன் மற்றும் ராஜா ஆகியோரும் உறவுகளுடன் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னர் வவுனியா வன்னிஇன் விருந்தினர் விடுதியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்களை சந்தித்து, அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் காணமல் போன உறவுகளை தேடுவது தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இவ் கலந்துரையாடலில் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனுடன், அங்கத்துவ கட்சிகளின் தலைவர்களான மாவை சேனாதிராஜா, தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
இங்கு மக்கள் தலைவர்களிடம் கண்ணீர்மல்க, தமது உறவுகள் தொடர்பான நிலைப்பாட்டை தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது. எமது உறவுகளை பிரிந்து வாழ்வதை விட நாமும் இறக்கலாம், என்றும் எமது தலைவர்களான உங்களிடம் மட்டுமே எமது உறவுகள் தொடர்பில் உரிமையுடன் கேட்கமுடியும், உங்களை இன்று சந்தித்து கதைப்பதை நாம் கொடையாக எண்ணுவதாகவும் பல கருத்துகள் கண்ணீருடன் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனிடம் முன்வைக்கப்பட்டது.
இன்றைய நிகழ்வுகள் குறித்து புளொட் அமைப்பின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்களிடம் கேட்டபோது.
எமது காணமல் போன உறவுகள் குறித்தும் மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலையை மையப்படுத்தி தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் ஓர் அமையத்தினை ஏற்படுத்தி அதனூடாக உறவுகளின் விடுதலைக்காகவும் சட்ட நடவடிக்கைகளுக்கும், அவர்களின் குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்கி அவர்களை சமூகத்தில் தலைநிமிர்ந்து வாழ சகல உதவிகளையும் வழங்க கட்சி தலைவர்களூடாக அனைவரும் முன்வரல் வேண்டும்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்றத்துக்கான தேர்தல் விஞ்ஞாபனத்தில் எமது அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஊடாக அரசியல் கைதிகள், காணமல் போனோரின் விடுதலையின் தீர்மானம் தெளிவாக குறிப்பிட்டு வெளியிட எமது அமைப்பு விரிவான அறிக்கை தயாரிக்கின்றமை குறிப்பிடத்தக்கது என்று தெரிவித்தார்.