பலாத்காரத்திற்கு இணங்காததால் பெண்ணை எரித்துக் கொன்ற பொலிசார்!!

762

Fire

உத்தர பிரதேசத்தில் காவல் நிலையத்தில் பெண்ணை கற்பழிக்க முயன்ற பொலிசார், பின்னர் அவரை தீ வைத்து எரித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாராபங்கியில் உள்ள ஒரு கிராமத்தில் இரு கும்பல்களுக்கிடையே பயங்கர சண்டை நடந்துள்ளது. இது தொடர்பாக பொலிசாருக்கு புகார் சென்றது. இதனையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்த கிராமத்தில் உள்ள ஒருவரை விசாரணைக்காக பொலிசார் அழைத்து சென்றுள்ளனர்.

ஆனால் அவர் காலை வரை வீடு திரும்பவில்லை. இதனால் அவரை தேடி காவல் நிலையத்திற்கு அவரது மனைவி சென்றுள்ளார்.

அந்த சமயம் காவல் நிலையத்தில் இருந்த இரண்டு பொலிசார் அந்த பெண்ணின் நகைகளை பறித்துக்கொண்டு, அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளனர். ஆனால் அதற்கு அவர் மறுத்ததால் அந்த பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர்.

இதில் உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்ட அந்த பெண் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அவர் இன்று காலை பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

முன்னதாக, அவர் பாராபங்கி மாவட்ட நீதிபதி யோகேஸ்வர் ராம் மிஸ்ராவிடம் மரண வாக்குமூலம் கொடுத்துள்ளார். இது தொடர்பாக இரண்டு பொலிசார் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ஆனால் சம்பந்தப்பட்ட பொலிசார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை திருப்தி அளிக்கவில்லை என்றும், இவ்வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் எனவும் அவரது மகனும் பத்திரிகையாளருமான சந்தோஷ் வலியுறுத்திள்ளார். இது தொடர்பாக முதலமைச்சரையும் அவர் விரைவில் சந்திக்க திட்டமிட்டுள்ளார்.