குழந்தையை பார்க்க வருமாறு அழைத்து கள்ளக்காதலுடன் ஓடிய மனைவிக்கு சரமாரி வெட்டு!!

301

TamilDailyNews_8449627161027

குழந்தையை பார்க்க வருமாறு அழைத்து, கள்ளக்காதலுடன் ஓடிய மனைவியை சரமாரியாக வெட்டிய கணவன் மற்றும் அவரது நண்பர் கைது செய்யப்பட்டனர். விமான நிலையம் அருகே பட்டப்பகலில் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் சிவசங்கரன் நகர் பாரதியார் தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (35). துணிக்கடை நடத்தி வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன் உமா (27) என்பவர், ரமேஷ் கடைக்கு துணி எடுக்க சென்றார். அதில், இருவருக்கும் காதல் மலர்ந்தது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களுக்கு ஹரிஷ் (3) என்ற ஆண் குழந்தை உள்ளது. அதே பகுதி நடேசன் தெருவை சேர்ந்த பிரசன்னா (24) என்பவருடன், உமாவுக்கு தொடர்பு ஏற்பட்டது. ஒரு வாரத்துக்கு முன், குழந்தையுடன் வெளியே சென்ற உமா, கள்ளக்காதலன் பிரசன்னாவுடன் தலைமறைவானார்.

இதையடுத்து ரமேஷ், அவரை பல இடங்களில் தேடியும் எந்த தகவலும் இல்லை. இதற்கிடையில் பிரசன்னா, உமா திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ரமேஷ், சங்கர் நகர் போலீசில் புகார் செய்தார். போலீசார், இருதரப்பையும் அழைத்து விசாரித்தனர். அப்போது உமா, கள்ளக்காதலன் பிரசன்னாவுடன் வாழ விரும்புவதாக கூறினார். உடனே, தனது குழந்தையை தன்னிடம் ஒப்படைக்கும்படி ரமேஷ் கூறினார்.

போலீசார், குழந்தையை அவரிடம் ஒப்படைத்தனர். மனைவி, கள்ளக்காதலுடன் சென்றதால் ரமேஷ் வேதனையும், அவமானமும் அடைந்தார். இந்நிலையில், நேற்று காலை உமாவுக்கு, ரமேஷ் போன் செய்தார். அதில், குழந்தை ஹரிஷ், உன்னை பார்க்க வேண்டும் என அழுகிறான். அவனை பார்த்துவிட்டு செல் என கூறியுள்ளார்.

அதன்படி, சென்னை விமான நிலையம் அருகே உள்ள ஹோட்டலுக்கு நேற்று மதியம் உமா, காதலன் பிரசன்னாவுடன் சென்றார். வெளியே ரமேஷ், அவரது நண்பர் ஆகியோர் நின்றனர்.
அப்போது ரமேஷ், என்னை இப்படி அவமானப்படுத்தி விட்டாயே என கூறி திட்டினார். இதில் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

ஆத்திரமடைந்த ரமேஷ், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, உமாவை சரமாரியாக வெட்டினார். இதை பார்த்ததும், பிரசன்னா அங்கிருந்து தப்பியோடி விட்டார். உமாவுக்கு 2 கைகள், தலை உள்பட உடலில் பலத்த வெட்டு விழுந்தது.

பட்டப்பகலில் இளம்பெண்ணை, கத்தியால் வெட்டுவதை பார்த்த அப்பகுதி மக்கள், ஓடிவந்து ரமேஷ் மற்றும் சாம்சனை சுற்றி வளைத்து பிடித்தனர். பல்லாவரம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். அங்கு படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த உமாவை மீட்டு, பல்லாவரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. பொதுமக்களிடம் சிக்கி இருந்த ரமேஷ், சாம்சன் ஆகியோரை கைது செய்து காவல் நிலையம் கொண்டு சென்றனர்.
இதற்கிடையில் தப்பியோடிய பிரசன்னாவையும் பிடித்து, போலீசார் காவல் நிலையம் கொண்டு சென்றனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.