வவுனியாவில் பிரபலமான பெட்ரோல் நிரப்பும் இடங்களில் நடைபெறும் இச் சம்பவம் பற்றி பலர் எமக்கு தெரிவித்திருந்தனர் சமூக விழிப்புணர்வு கருதி வவுனியா நெற் வாசகர் அனுப்பிய இச் செய்தியை வெளியிடுகின்றோம்.
இன்று வவுனியாவில் மிகப் பிரபலமான பெட்ரோல் நிரப்பும் நிலையத்திற்குப் போயிருந்தேன்.100 ரூபாய்க்கு பெட்ரோல் நிரப்பச் சொன்னேன். அங்கு பணிபுரியும் நபர் சரியாக ரூ99.50 சதத்துக்கு பெற்றோல் நிரப்பினார். இயந்திரமும் அதனையே காட்டியது.
நூறு ரூபாய்க்கு பெற்றோல் நிரப்பச் சொன்னால் ஏன் 99.50 ரூபாய்க்கு நிரப்பி இருக்கின்றீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர் ஒரு புரியாத காரணத்தைச் சொன்னார். அது மட்டும் இல்லாமல் இதனை ஒரு சில நுகர்வோருக்கு தாங்கள் செய்வதாகக் கூறினார்.
இன்று இதனை நான் அவதானிக்கவில்லை என்றால் எத்தனை 50 சதங்கள் அவர்களுக்கு கிடைத்திருக்கும். 100 ரூபாய்க்கு 50 சதம், 1000 ரூபாய்க்கு 5ரூபாய் , 10,000 ரூபாய்க்கு 50 ரூபாய், 100,000 ரூபாய்க்கு 500 ரூபாய். ஆகவே இப்படி ஒரு மாதத்தில் 15000 ரூபாய் வரையில் மக்களிடம் சுரண்டுகிறார்கள். இது முகாமைத்துவத்துக்கு தெரிந்தோ தெரியாமலோ நடைபெறுகின்றது.
இன்று பெட்ரோல் நிரப்பும் பம்புகளை பெட்ரோல் டான்க் உள்ளே விடும்போதுதான் பெட்ரோல் வரும் சத்தம் வருகின்றது. உள்ளே போனதும் காற்று வந்தாலும் எமக்குத் தெரியாது. ஆகவே பெற்றோல் நிரப்பும் போது மிகக் கவனமாக நிரப்புங்கள். நாங்கள் அசட்டையாக இருக்கும் ஒரு சில காரியங்களே பின்நாட்களில் பொருளாதாரத்திலும் தாக்கத்தினை கொண்டுவரக்கூடும்.
நான் சந்தித்த இந்த அனுபவத்தைத்தான் உங்களுடன் ஆதாரத்துடன் பகிர்ந்துகொள்கின்றேன். இதுபோன்று பலரிடம் 50 சதம் முதல் 1 ரூபாய் வரை குறைத்து பெட்ரோல் நிரப்பப்படுகின்றது. பலர் 50 சதம் தானே என்று எதுவும் சொல்லாமல் சென்றுவிடுகின்றனர்.
இவ் இலத்திரனியல் இயந்திரத்தில் 100 ரூபாய்க்கோ அல்லது வேண்டிய தொகைக்கு மிகத் துல்லியமாக பெட்ரோல் நிரப்ப முடியும். இருந்தும் ஏன் எவ்வாறு குறைத்து நிரப்புகிறார்கள்?
-ஸ்ரீ அருணன்-