வவுனியாவில் இப்படியும் ஒரு நூதனத் திருட்டு!!

319

Thief

வவுனியா, நொச்சிக்குளத்தை சேர்ந்த பெண்மணியொருவர் பணத்திற்கு ஆசைப்பட்டு தனது 7 பவுண் தாலிக்கொடியை திருடர்களிடம் பறிகொடுத்த சம்பவம் ஒன்று இரண்டு நாட்களுக்கு முன்னர் இடம்பெற்றுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர். இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்..

நாகரிகமாக உடையணிந்த ஆணெருவரும், பெண்ணொருவரும் நொச்சிக்குளத்தை சேர்ந்த பெண்மணியை அணுகி தாங்கள் இரத்தினபுரியிலிருந்து வந்திருப்பதாகவும் தங்களிடம் இரத்தினக்கல் ஒன்று இருப்பதாக சிங்களம் மற்றும் தமிழ் கலந்த கொச்சை தமிழில் பேசியதுடன் இரத்தினக்கல்லின் பெறுமதி 15 இலட்சம் ரூபா என தெரிவித்ததுடன், தாங்கள் வெளியூர் என்பதால் தங்களை கடைக்காரர் நம்பவில்லை அதனால் இந்த இரத்தினக்கல்லை விற்றுத் தந்தால் ஒரு இலட்சம் தருவதாக தெரிவித்த அவர்கள், துணியில் சுற்றி கட்டப்பட்ட கல் ஒன்றை அப் பெண்மணியிடம் கொடுத்துள்ளனர்.

இரத்தினக்கல்லை விற்றுத்தர சம்மதம் தெரிவித்த அப்பெண்மணியிடம் திருடர்கள் 15 இலட்சம் ரூபா இரத்தினக்கல்லை எடுத்துச் செல்லும் நீங்கள் நம்பிக்கைக்கு ஏதாவது கொடுத்துவிட்டு செல்லுங்கள் என்று கூறியதிற்கு இணங்க அப்பெண்மணி தாலியை கழட்டி கொடுத்துவிட்டு சென்றுள்ளார். கடையில் சென்று பார்த்த போது துணியில் சுற்றப்பட்டு இருந்தது ஒரு சிறிய கருங்கல் என தெரிய வந்திருந்தது.

ஏமாற்றப்பட்ட பெண்மணி தாலிக்கொடியை வாங்கியவர்களை தேடிய போது அவர்கள் மாயமாகியிருந்தனர். பறிகொடுத்த தாலியின் பெறுமதி சுமார் 350,000 ரூபாய். இது தொடர்பான விசாரணைகளை தாம் மேற்கொண்டு வருவதாகவும் வவுனியா பொலிசார் மேலும் தெரிவித்தனர்.