வவுனியா மகாறம்பைக்குளத்தில் வீடொன்றிலிருந்து முதியவர் ஒருவர் நேற்று(18.07.2015) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது..
நேற்று மகாறம்பைக்குளம் வீட்டுத் திட்டம் 264ம் இலக்க வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதைஅடுத்து அயலில் வசித்தோர் சென்று பார்த்தபோது அவ் வீட்டில் வசித்து வந்த முதியவர் இறந்து கிடந்துள்ளார்.
இவர் வீட்டில் தனியாக வசித்துவந்ததாகவும், இரும்பு, பேப்பர் உள்ளிட்ட பழைய பொருட்களை சேகரித்து விற்பனைசெய்வதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் வாழ்ந்துவந்ததாகவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
இவர் மூன்று நாட்களுக்கு முன்னர் நோய்வாய்பட்டு இறந்திருக்கலாம் என்று பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர். இறந்தவர் 65 வயது மதிக்கத்தக்க மருதமுத்து என்று தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவ இடத்திற்கு வருகைதந்த வவுனியா பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வவுனியா பொதுவைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.
-சுகுமார் மற்றும் மதுஜன்-