வவுனியா புதையல்பிட்டி பொதுமக்கள் மற்றும் வர்த்தக நிலைய உரிமையாளர்கள் ஆகியோர் இணைந்து வவுனியாவிருந்து செட்டிகுளம் செல்லும் பிரதான விதியினை வழி மறித்து இன்று (20.07.2015) காலை இவ் விதியினை புணரமைத்துத்தருமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.
இந்த வீதி புணரமைப்புப் பணியை மேற்கொள்வதாக கூறி இவ் வீதியில் கிரவல் செப்பனிடப்பட்டுள்ளது. அதன் பின்னர் பல காலமாக புணரமைப்புப் பணிகள் மேற்கொள்ளாமல் காணப்படுகின்றது. இதனால் இவ் வீதியைப் பயன்படுத்தும் பாடசாலை மாணவர்கள், உத்தியோகத்தர்கள் இவ் வீதியால் பயணிக்க முடியாமல் உள்ளது.
கனரக வாகனங்கள் போக்குவரத்து செய்யும்போது அதிக தூசி படையெடுப்பதால் சுவாசப்பிரச்சினை உட்பட வியாபார நிலையத்திலிருக்கும் பொருட்களிற்கும் சேதம் ஏற்படுவதாக வியாபார உரிமையாளர்களினால் சுட்டிக்காட்டப்பட்டது.
ஒரு நாளில் இவ் விதியில் 35- 50 வாகனங்கள் பயணம் செய்வதாகவும், பாடசாலை செல்லும் மாணவர்களின் சீருடை மண் புழுதியால் அழுக்கடைவதாகவும் இவ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபொது மக்கள் தெரிவித்தனர்.
-பிராந்திய செய்தியாளர்-