வவுனியா நெளுக்குளம் குகன்நகர் பகுதியில் நேற்று முன்தினம் (06.08.2015) கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்ட விபுலானந்தா கல்லூரி மாணவி குணசேகரம் திவ்யாவின் இறுதிக் கிரிகைகள் நாளை ஞாயிற்றுக் கிழமை நடைபெறவுள்ளன.
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு இம்முறை தோற்றுவதற்கான அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் மனமுடைந்த நிலையில் இவர் கிணற்றில் பாய்ந்து தற்கொலை செய்திருந்தார்.
இச் சம்பவம் வவுனியாவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக கல்விச் சமூகத்தின் மத்தியில் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவத்தை அடுத்து பல்வேறு பொதுமக்கள் மற்றும் கல்விச் சமூகத்தினர் வவுனியா நெற்றைத் தொடர்புகொண்டு தமது கண்டனத்தை பதிவு செய்வதுடன் தமது ஆதங்கத்தையும் தெரிவித்து வருகின்றனர்.
ஒரு சமூகத்தின் வளர்ச்சி என்பது கல்விச் சமூகத்திலேயே பெரும்பாலும் தங்கியுள்ளது. இவ்வாறு மாணவர்களுக்கு எதிராக நடைபெறும் சம்பவங்கள் எம் சமூக வளர்ச்சியை பெரும்பாலும் பாதிக்கக்கூடும்.எமக்குள்ள பெரும்பலம் கல்வியாகும். எனவே அதனைப் பாதுகாக்க வேண்டியது எமது கடமையாகும்.
கடந்த சில வருடங்களாக வவுனியாவில் மாணவர்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. ஒரு சில சம்பவங்கள் செய்திகளாக வெளிவருகின்றபோதும், வெளியே தெரியாத பல்வேறு சம்பவங்கள் மாணவர்களுக்கு எதிராக நடைபெற்று வருகின்றன.
மாணவர்களுக்கு எதிராக நடைபெறும் சம்பவங்களை எந்த விதத்திலும் ஏற்க முடியாதவை. மாணவர்களுக்கு எதிரான வன்முறையில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் மாணவர்களுக்கு உடல் ரீதியாக ஏற்படுத்தப்படும் பாதிப்புக்கள் மட்டுமன்றி உள ரீதியாக ஏற்படுத்தப்படும் பாதிப்புக்களும் வன்முறைகளே.
மாணவர்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைக்கு எதிராக குரல்கொடுக்க வேண்டியது எமது கடமையாகும். திவ்யாவின் போன்ற மரணங்கள் இனியும் நிகழக்கூடாது என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும்.
தொடர்புபட்ட செய்திகள் :
வவுனியாவில் பாடசாலை மாணவி கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு!!(படங்கள்)
வவுனியாவில் பாடசாலை மாணவி தற்கொலை: அதிபர் பணிநீக்கம்!!2ம் இணைப்பு (படங்கள்)







