
கூகுள் இந்தியா, யாகூ இந்தியா, மைக்ரோசொப்ட் இந்தியா ஆகிய இணையதளங்களுக்கு எதிராக சாபு மாத்யூ ஜோர்ஜ் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநலன் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், கருவில் இருக்கும் குழந்தை, ஆணா, பெண்ணா என்பதை கண்டறியும் சோதனை குறித்த விளம்பரங்கள் மற்றும் தகவல்களை உலகம் முழுவதும் முடக்குமாறு மேற்கண்ட இணையதளங்களுக்கு ஏற்கனவே நீதிமன்றம் உத்தரவிட்ட போதிலும், அதை அவை கடைபிடிக்காமல், இந்திய சட்டங்களை மீறி வருவதாக அவர் கூறியிருந்தார்.
இந்த மனு, நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர்.பானுமதி ஆகியோர் அடங்கிய குழு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் சஞ்சய் பரிக் ஆஜராகி வாதாடினார்.
அதையடுத்து, இந்த குற்றச்சாட்டுக்கு 2 வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு கூகுள் உள்ளிட்ட 3 இணையதளங்களுக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.





