வவுனியாவில் திறந்த வாகனத்தில் குடி தண்ணீர்ப் போத்தல் விநியோகம் செய்தவருக்கு 10000 அபராதம்!!

591

OLYMPUS DIGITAL CAMERA

வவுனியாவில் திறந்த வாகனத்தில் குடிதண்ணீர் விநியோகம் செய்த விநியோகஸ்தருக்கு வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் நேற்று (21.08.2015) ரூபா பத்தாயிரம் அபராதம் விதித்ததுடன், அறுபதாயிரம் ரூபா பெறுமதியான கைப்பற்றப்பட்ட தண்ணீர் போத்தல்களை அழித்துவிடுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது..

நேற்று (21.08.2015) காலை வவுனியாவிலிருந்து முல்லைத்தீவிற்கு விற்பனைக்காக திறந்த வாகனத்தில் குடிதண்ணீர்ப் போத்தல்களை ஏற்றிச்சென்றவேளை ஓமந்தையில் பொதுசுகாதார பரிசோதகர்களால் சோதனையிடப்பட்போது பிரதான உணவு அதிகாரியின் அனுமதியின்றி 19லீற்றர் தண்ணீர் போத்தலில் அடைத்து விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது.

அத்துடன் சூரிய வெப்பம் படும்படி திறந்த வாகனத்தில் விற்பனைக்கு கொண்டுசென்றதை அடுத்து இவற்றை கைப்பற்றி வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டபோது ரூபா பத்தாயிரம் அபராதத்துடன் கைப்பற்றப்பட்ட ரூபா அறுபதாயிரம் பெறுமதியான குடிதண்ணீர் போத்தல்களை அழித்துவிடுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

-பிராந்திய செய்தியாளர்-