2 உலகப் போர்களை கடந்து வந்த 115 வயது மூதாட்டி காலமானார்!!

869

indian

பாகிஸ்தானில் பிறந்து, தற்போது இங்கிலாந்தில் வாழ்ந்து வந்த சாண்ட் கவுர் பஜ்வா என்ற 115 வயது மூதாட்டி கடந்த வெள்ளியன்று இயற்கை எய்தினார். இங்கிலாந்தின் அதிகூடிய வயதுப் பெண்மணியான இவர், இரண்டு உலகப்போர்களைப் பார்த்துள்ளாராம்.

சாண்ட் கவுர் பஜ்வா 1898ம் ஆண்டு ஜனவரி 1ம்திகதி தற்போது பாகிஸ்தானில் உள்ள குஜராத் பகுதியில் பிறந்தார். 1960ம் ஆண்டு இங்கிலாந்துக்கு குடி பெயர்ந்த இவர், இங்கிலாந்தின் வயது மூத்த பெண்மணி என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

உலகளவில் வயது முதிர்ந்த இரண்டாவது பெண்மணி இவர்.16 வயதில் மணமுடிக்கப்பட்ட பஜ்வா சிறு வயதிலேயே பெற்றோரை இழந்தவர்.
தனது மூத்த சகோதரியால் வளர்க்கப்பட்டார். நான்கு குழந்தைகளுக்கு தாயான நிலையில் மணமான ஆறு வருடங்களிலேயே பஜ்வாவின் கணவர் காலமானார்.

1972ம் ஆண்டு இவரது மகள் எதிர்பாராவிதமாக மரணமடைந்த போது இவருக்கு வயது 74. ஆனால், அந்த தள்ளாத வயதிலும் தனது பேரக்குழந்தைகளை எடுத்து பராமரித்து வளர்க்கத் தொடங்கினார்.
அதில் இரட்டைக் குழந்தைகளான பேரன்களின் வயது அப்போது 6 ஆகும். எங்கள் பாட்டியின் உடல் மற்றும் உள்ள உறுதிதான் அவரை இத்தனை நாள் வாழ வைத்தது.

அவரைப் போன்ற பெண்மணியை பார்ப்பது மிகவும் அரிது என அவரது பேரன்கள் மற்றும் கொள்ளுப் பேரன்கள் அவரைப் புகழ்ந்து பேசுகின்றனர்.
தற்போது, இவருக்கு 12 பேரப்பிள்ளைகளும், 28 கொள்ளுப் பேரப்பிள்ளைகளும் உள்ளனராம்.

வயோதிபம் காரணமாக கடந்த வெள்ளியன்று இயற்கை எய்திய இப்பாட்டியின் இறுதிச்சடங்கை சிறப்பாக செய்து முடிக்க உறவினர்கள் திட்டமிட்டிருக்கிறார்களாம். தன் மகள் மற்றும் மருமகனோடு 1966ம் ஆண்டு லண்டனில் குடியேறிய பஜ்வா தனது இறுதிமூச்சை அங்கேயே விட்டுள்ளார்.