பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 30ம் திகதி பாராளுமன்ற தேர்தலின் போது வாக்களித்துவிட்டு பா.ஜ.க.வின் சின்னமான தாமரை சின்னத்துடன் மை பூசப்பட்ட விரலை உயர்த்தியவாறு, வாக்குச்சாவடி வாசலில் நின்று தனது செல்போனில் ‘செல்பி’ எடுத்துக் கொண்டார்.
இதனையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகளை நரேந்திர மோடி மீறிவிட்டதாக ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த நிசாந்த் வர்மா என்பவர் அகமதாபாத் நகர கீழமை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து குஜராத் உயர்நீதிமன்றத்தில் வர்மா மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு விசாரணை கடந்த மாதம் 28 ஆம் திகதி விசாரணைக்கு வந்தது. அப்போது சட்டத்தரணி திரிவேதி கால அவகாசம் கேட்டதால் நீதிபதி உத்வானி ஒக்டோபர் 6 ஆம் திகதிக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.
அதன்படி இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. சட்டத்தரணி வழக்கு தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய வராததால், அரசு சட்டத்தரணி மிதேஷ் அமின் மேலும் கால அவகாசம் கேட்டார். இதில் திடீர் திருப்பமாக இந்த வழக்கை விசாரிக்க நான் விரும்பவில்லை என்றும் வழக்கில் இருந்து தான் விலகிக்கொள்வதாகவும் நீதிபதி உத்வானி அறிவித்தார்.