ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகி இருக்கும் கோச்சடையான் படம் குறித்து பல்வேறு செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தது. கோச்சடையான் படம் டிராப்பாகி விட்டதாகவும், கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்க இருக்கிறார் என்றும் செய்திகள் உலவின.
சென்ற வாரத்தில் கூட ஷங்கர் ரஜினியை சந்தித்து படம் குறித்து பேசியதாகவும் செய்திகள் வெளியாகின. இச்செய்திகள் அத்தனையும் பொய்யாக்கி இருக்கிறது கோச்சடையான் படக்குழு.
கோச்சடையான் படம் குறித்து தயாரிப்பாளர்களில் ஒருவரான முரளி மனோகர் கூறியிருப்பது ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய அவதார், ஸ்பீல்பெர்க் இயக்கிய டின் டின் ஆகிய படவரிசையில் கோச்சடையான் படம் மிக நவீன தொழில்நுட்பத்தில் உருவாகியிருக்கிறது. அவதார், டின் டின் ஆகிய இரண்டு ஹாலிவுட் படங்களும் தலா ரூ.2 ஆயிரம் கோடி செலவில், நான்கு வருடங்களில் தயாரானவை.
கோச்சடையான் படத்தை நாங்கள் ஹாலிவுட் படங்களுக்கு இணையாக 125 கோடி செலவில் இரண்டு வருடங்களில் உருவாக்கியிருக்கிறோம். படத்தில் கிராபிக்ஸ் வேலைகளும் நவீன தொழில்நுட்பங்களும் அதிகமாக இடம்பெற்றிருப்பதால்தான் தாமதம் ஏற்பட்டுள்ளது.
கோச்சடையான் படம் தமிழ் திரை உலகில் மிகப்பெரிய முயற்சி. நிச்சயமாக இந்த படத்தை அனைத்து தரப்பு மக்களும் பார்த்து பாராட்டுவார்கள். இளமையான தோற்றத்தில் ரஜினிகாந்த் செய்திருக்கும் சாகசங்கள் பரபரப்பாக பேசப்படும்.
கோச்சடையான் படத்தை ரஜினிகாந்த் பார்த்துவிட்டு அசந்தார். இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் படமே பார்க்காதவர்கள்கூட இந்த படத்தை இரண்டு முறை பார்ப்பார்கள் என்று கூறினார். இயக்குனர் சவுந்தர்யா மிகத்திறமையாக ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு இந்த படத்தை இயக்கி இருக்கிறார்.
படப்பிடிப்பு, எடிட்டிங் பணிகள் முடிவடைந்தன. பின்னணி இசைக் கோர்ப்பு பணிகள் நடைபெறுகின்றன. ஸ்பெஷல் எபக்ட்ஸ் வேலைகளும் நடைபெறுகின்றன. செப்டம்பர் மாதத்துக்குள் எல்லா வேலைகளும் முடிவடைந்துவிடும்.
படம் திரைக்கு வரும் தேதி பற்றி ஒக்டோபர் மாதம் முடிவு செய்யப்படும். கோச்சடையான் படம் இந்த ஆண்டில் கண்டிப்பாக திரைக்கு வரும் என்று தெரிவித்து இருக்கிறார்.