மட்டக்களப்பு, ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள களுவன்கேணியில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை வெள்ள நீர் நிரம்பியிருந்த பள்ளத்தினுள் விழுந்த ஒரு வயதுக் குழந்தை மரணமடைந்ததாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தில் களுவன்கேணியை சேர்ந்த கங்காதரன் கடாலினி என்ற குழந்தையே மரணித்துள்ளது. குழந்தையின் தாய் வீட்டில் சமையல் வேலையில் ஈடுபட்டிருந்தபோது குழந்தை வீட்டின் பின்புறமாக நகர்ந்து சென்று இந்த நீர் நிரம்பிய பள்ளத்தில் வீழ்ந்துள்ளது.
சிறிது நேரத்தில் அந்த தாய் குழந்தையைத் தேடிச் சென்ற போது குழந்தை நீரில் மூழ்கிக் கிடந்துள்ளது. தாய் குழந்தையை மீட்டு உடனடியாக செங்கலடி பிரதேச வைத்தியசாலைக்குக் எடுத்து வந்தபோதும் குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.
இச்சம்பவம் பற்றி ஏறாவூர் பொலிஸார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.