பிரபல நடிகையுடன் செல்பி எடுத்து சிக்கலில் சிக்கிய முதல்வர்!!

321

Selfi

இந்தியாவின் சத்தீஸ்கரில் யுனிசெப் அமைப்பின் நிகழ்ச்சிக்கு வந்த பிரபல நடிகையுடன், அம்மாநில முதல்வர் செல்பி எடுத்தது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சத்தீஸ்கரில் பா.ஜ.க முதல்வர் ராமன் சிங் தலைமையிலான அரசு உள்ளது. இம்மாநிலத்தின் தலைநகர் ராய்ப்பூரில், குழந்தைகள் உரிமை குறித்த மாநாட்டை, யுனிசெப் அமைப்பு நடத்தியது. நேற்று முன்தினம் நடந்த, மாநாட்டின் நிறைவு விழாவில், சிறப்பு விருந்தினராக பிரபல ஹிந்தி நடிகை கரீனா கபூர் பங்கேற்றார்.

இதே விழாவுக்கு வந்திருந்த, முதல்வர் ராமன் சிங்கும், கரீனா கபூரும் அருகருகே அமர்ந்திருந்தனர். விழா நடந்து கொண்டிருந்த போது, கரீனா கபூருடன் முதல்வர் ராமன் சிங், செல்பி புகைப்படம் எடுத்துக் கொண்டார். இதைப் பார்த்த அவரது அமைச்சரவை சகாக்கள் பலரும், ஒருவர் பின் ஒருவராக, கரீனா கபூருடன் செல்பி எடுத்தனர்.

இந்த செல்பி விவகாரம், சமூக வலைத்தளங்களில் பரவியதையடுத்து, பெரும் சர்ச்சை உருவாகியுள்ளது. ´மாநிலத்தில் நிலவும் வறட்சி மற்றும் அரசின் புறக்கணிப்பு காரணமாக, 10க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

விவசாயிகள் நலனில் அக்கறை காட்டாமல், நடிகையுடன் செல்பி எடுப்பதில் முதல்வர் ஆர்வம் காட்டுவது, எந்த விதத்தில் நியாயம்´ என, அம்மாநில காங்., தலைவர் பூபேஷ் பகேல் உட்பட, பலர் விமர்சனம் செய்துள்ளனர்.