
26.11.2015 அன்று அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி ஓடுகின்ற ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட யாழ் கொக்குவில் இந்துக் கல்லூரியின் மாணவன் செந்தூரனின் மரணத்திற்கு ஒரு உபகாரம் தேடுவதற்காகவும்,
இரண்டு தடவைகள் உண்ணாவிரதம் இருந்த அரசியல் கைதிகளின் விடுதலையை தமிழ்த்தேசிய கூட்டமைப்பின்னூடாக அரசாங்கம் வழங்கி இன்று வரையில் அந்த விடுதலையை நடைமுறைப்படுத்தவில்லை.
மேலும் தமிழ் மக்களுக்குரிய பிரதேசங்களான வடக்குக் கிழக்கு மாகாணங்களில் வரவு செலவுத்திட்டத்தில் கோரிய நிதியை அரசாங்கம் அரைவாசியை குறைத்து வழங்கியுள்ளது.
தமிழ் மக்களின் ஏகோபித்த பிரதிநிதிகளாக இன்று செயற்பட்டுக் கொண்டிருக்கும் எமது தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள், அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக எந்தவிதமான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாத காரணத்தினாலும் வரவு செலவுத் திட்டத்தின் மூலம் வடக்கு கிழக்கு மாகாண சபைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதிப் பற்றாக்குறையின் காரணமாகவும்,
இன்று வெற்றியின் விளிம்பில் எமது ஏகோபித்த தலைவர்களாக கணித்துக் கொண்டிருக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நடவடிக்கைகளைப் பார்த்து எமது மக்கள் அங்கலாய்த்துக் கொண்டிருக்கின்ற இந்த நேரத்தில் மக்களின் உள்ளங்களில் ஒரு தன்னம்பிக்கையினை ஏற்படுத்தும் நோக்கிலும் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் இம்முறை நடைபெறுகின்ற இந்த வரவு செலவுத்திட்டத்தை தமிழ்த் தேசிய கூட்டமைப்பினராகிய எமது பிரதிநிதிகள் பகிஷ்கரிப்பு செய்யவேண்டும் அல்லது எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என்று வவுனியா மாவட்ட சிவில் அமையங்களின் சார்பிலும் வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைவர் திரு.கி.தேவராஜன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.





