தெற்கு அதிவேக வீதியில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதோடு மேலும் ஏழ்வர் காயமடைந்துள்ளனர். விவசாய காப்புறுதி சபை வாகனம் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதோடு, இதில் பயணித்த 28 வயதான அதிகாரி ஒருவரே பலியாகியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இன்று காலை 07.00 மணியளவில் எல்பிடிய பொலிஸ் பிரிவுக்குச் உட்பட்ட 73ம் கட்டைப் பகுதியில் கொட்டாவையில் இருந்து காலி நோக்கி பயணித்த வேன் ஒன்றே பாதுகாப்பு வேலியில் மோதி இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
மேலும் சம்பவத்தில் காயமடைந்தவர்கள் கராபிடிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் இதன்போது உயிரிழந்த பெண் இரத்தினபுரி பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை விபத்துடன் தொடர்புடைய வாகன சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதோடு, சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை எல்பிடிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.