வவுனியா வாழவைத்தகுளம் அல்ஹிஜ்ரா இளைஞர் மற்றும் விளையாட்டுக்கழகம் இணைந்து ஏற்பாடு செய்த வாழ்வோரை வாழ்த்துவோம் நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை வாழவைத்த குளம் ஜும்மா பள்ளிவாயலில் கழகத்தின் விளையாட்டுத்துறைக்கான இணைப்பாளர் மௌலவி பஸ்லின் தலைமையில் நடைபெற்றது.
குறித்த நிகழ்வில் 2014 மற்றும் 2015ம் ஆண்டுகளில் கலைமாணிப்பட்டத்தை வென்ற இளைஞர் யுவதிகள், பல்கலைக்கழக பட்டப்படிப்பை முடித்த மாணவர்கள் மற்றும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் வெற்றியீட்டிய மாணவர்களும் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர் .
2016ம் ஆண்டு தரம் ஒன்றில் காலடி எடுத்து வைக்கும் பாடசாலை மாணவர்களுக்கு அப்பியாசக்கொப்பிகளும் வழங்கி வைக்கப்பட்டதுடன் கழகத்தின் வரலாற்றில் முதன் முறையாக 2016ம் ஆண்டுக்கான நாட்காட்டிகளும் அச்சிடப்பட்டு விநியோகிக்கப்பட்டது.
கழகத்தினால் நடாத்தப்பட்ட கரப்பந்தாட்ட போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கான பரிசுகள் வழங்கப்பட்டதுடன் மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.
குறித்த நிகழ்வின் கௌரவ விருந்தினராக குருநாகல் மாவட்டத்தின் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் செயலாளர் சிராஜ் நளீமியும் சிறப்பு பேச்சாளராக ஜம்மியத்துல் உலமாவின் குருநாகல் மாவட்ட உதவிச்செயலாளர் றிஸ்மி காசிமி உட்பட பிரதேசத்தின் பிரதேச சபை உறுப்பினர்கள் அதிகாரிகள் மக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
குறித்த நிகழ்வில் உரையாற்றிய குருநாகல் மாவட்டத்தின் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் செயலாளர் சிராஜ் நளீமி கழகத்தின் வளர்ச்சிக்காக 50 000 ரூபாவினை கட்சியின் நிதியிலிருந்து பெற்றுத்தருவதாக வாக்குறுதி அளித்தமை குறிப்பிடத்தக்கது.
-செட்டிகுளம் சர்ஜான்-






