வவுனியா நகர்ப் பகுதியில் சட்டவிரோதமாக வீதியை ஆக்கிரமித்த வர்த்தகர்களின் கொட்டகையை வவுனியா நகரசபை அகற்றிய போது செய்தி சேகரித்துக் கொண்டிருந்த வவுனியா நெற் சுதந்திர ஊடகவியலாளரான பாஸ்கரன் கதீசன் மீது வர்த்தக நிலைய ஊழியர் ஒருவர் தாக்குதல் நடாத்தியிருந்தார்.
இதனையடுத்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பாஸ்கரன் கதீசன் வவுனியா பொலிஸில் முறைப்பாடு ஒன்றையும் பதிவு செய்திருந்தார். அவருக்கு ஆதரவாக வவுனியா ஊடகவியாலளர்கள் அனைவரும் பொலிஸ் நிலையம் சென்று, தாக்குதல் நடாத்திய நபரை கைது செய்யுமாறு வலியுறுத்தினர். இதனை அடுத்து தாக்குதல் நடாத்திய நபர் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டார்.
வவுனியாவில் நடைபெறும் நிகழ்வுகள், சம்பவங்கள், பிரதேச மக்களின் பிரச்சனைகள் அனைத்தையும் உடனுக்குடன் வவுனியா நெற் இணையத்தில் நாம் வெளியிட்டு வருகின்றோம். இச் செய்திகளை வெளிக்கொணர்வதில் முக்கிய பங்கு வகிப்பவர் பாஸ்கரன் கதீசன். வவுனியா நெற் இணையத்திற்கு இவரது சேவை அளப்பரியது.
ஊடகவியலாளர்கள் தாக்கப்படுவதை அனுமதிக்க முடியாது. ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக செயற்பட ஆவண செய்யவேண்டியது அனைவரினதும் கடமையாகும். இவ் வகையில் மிகவும் இளம் வயது ஊடகவியலாளரான இவர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு எமது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கின்றோம்.
-வவுனியா நெற் நிர்வாகம்-