
தமிழ் மக்களுக்கு மறுக்கப்பட்டிருக்கின்ற உரிமையும், சுயமரியாதையும், கௌரவமும் மீண்டும் கிடைப்பதற்கு திடசங்கற்பம் பூணுவோம். எமது மக்கள் எதிர்நோக்கியுள்ள அனைத்து விடையங்களுக்கும் அவர்களுக்கு சாதகமான பதிலை பெற்றுக்கொடுப்பதற்கு பற்றுறுதியுடன் செயற்படுவோம் என்று உறுதி ஏற்போம். காணாமல் போகச்செய்யப்பட்ட விடையங்களில் உண்மை நிலைவரத்தையும், அரசியல் கைதிகளின் துரிதமான விடுதலையையும் கொண்டு வருவதாக புதிய வருடம் அமையட்டும்.
பண்மைத்துவ ஜனநாயகத்தை ஏற்று அனைவருக்கும் சம உரிமையுடைய ஒரு சமுதாயத்தை உருவாக்குவதற்கும், யாரும் யாரினுடைய தோள் மீதும் சவாரி செய்யாத நிலையை தோற்றுவிப்பதற்கும் சபதம் ஏற்போம்.
புதிய ஒரு விடியலில் புத்தாண்டு பிறக்கின்ற வேளையிலே, புதிய எண்ணங்கள் எம்மை ஆக்கிரமித்து ஒளிமயமான வாழ்வுக்கு எம்மை வழிநடத்தட்டும்.
பெரும்பான்மை இனவாத பிடியிலிருந்தும், குறுகிய கட்சி அரசியல் நலனிலிருந்தும் ஆட்சியாளர்கள் விடுபட்டு, ஏற்பட்டிருக்கின்ற ஆட்சி மாற்றம் ஆனது தமிழ் பேசும் மக்களுக்கான அனைத்து உரிமைகளையும் வழங்குவதுடன், அவர்களின் மனங்களை வெற்றி கொள்வதாக அமையட்டும்.
ந.சிவசக்தி ஆனந்தன்,
பாராளுமன்ற உறுப்பினர்,
வன்னி மாவட்டம்





