ரியூசன் செல்லாது 8 கிலோமீற்றர் பயணித்து மாவட்டத்தில் முதல்நிலை பெற்ற வவுனியா மாணவி!!

558

vavuniya_student_002

ரியூசன் செல்லாது பாடசாலை படிப்பை மட்டுமே நம்பி 8 கிலோமீற்றர் தூரம் பயணித்து கலைப்பிரிவில் முதல்நிலை பெற்றுள்ளார் வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலய மாணவி அழகுசுந்தரம் ஹம்சாயினி.

இது தொடர்பில் அம் மாணவி தெரிவித்ததாவது..

ஆரம்பக் கல்வியை சுந்தரபுரம் வித்தியாலயத்திலும், உயர்தரக் கல்வியை புதுக்குளம் மகாவித்தியாலயத்திலும் கற்றேன். வரலாறு, தமிழ், இந்துநாகரிகம் ஆகிய பாடங்களைக் கற்று 3A சித்தி பெற்று மாவட்ட மட்டத்தில் முதல்நிலை பெற்றுள்ளேன்.

என்னுடைய கிராமம் ஒரு பின்தங்கிய கிராமம். ரியூசன் வசதிகள் இல்லை. நான் ரியூசனோ அல்லது எந்தவிதமான பிரத்தியேக வகுப்புக்களுக்கோ செல்லாது பாடசாலைக் கல்வியை மட்டுமே நம்பிப் படித்து இந்த நிலையை அடைந்துள்ளேன். அதேபோல் வீட்டில் எனக்கு படிப்பு சம்மந்தமாக எந்தவித கட்டுப்பாடுகளும் இருக்கவில்லை. சுதந்திரமாக படித்தேன்.

அந்தவகையில் எனது இந்த நிலைக்கு காரணமான புதுக்குளம் மகாவித்தியாலய அதிபர், ஆசிரியர்கள், மற்றும் எனது பெற்றோர், உறவினர்களுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.

எனது வீட்டில் இருந்து 8 கிலோமீற்றர் தூரத்தில் எனது பாடசாலை உள்ளது. தினமும் துவிச்சக்கர வண்டியில் பல கஸ்ரங்களுக்கு மத்தியில் பயணித்தே படித்தேன். அதனை மறந்துவிடமுடியாது.

எதிர்காலத்தில் பல்கலைக்கழக படிப்பை முடித்து ஒரு ஆசிரியராகி, எமது கிராமம் போன்ற போரால் மிகவும் பாதிக்கப்பட்ட கிராம மாணவர்களுக்கு கல்விச் சேவையை வழங்கி அவர்களை சமூகத்தில் நல்ல நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்பதே எனது ஆசை எனத் தெரிவித்தார்.

வவுனியா மண்ணுக்கு பெருமை சேர்த்த இவருக்கு வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்கள்.

vavuniya_student_001