வவுனியா நகர வரியிறுப்பாளர் சங்கம், கலை இலக்கிய நண்பர்கள் வட்டம், தமிழ் விருட்சம் இணைந்து ஏற்பாடு செய்த தமிழ் பாட்டி ஒளவையார் தினம் இன்று (23.01.2016) வெளிக்குளம் சந்தியில் அமைந்துள்ள ஒளவையார் சிலையடியில் தமிழ் மணி அகளங்கன் தலைமையில் சிலையை பராமரிக்கும் தேசமான்ய குமாரசாமி அனுசரணையில் இடம் பெற்றது.
இந்த நிகழ்வில் வவுனியா மாவட்ட கலாசார உத்தியோகத்தர் இ.நித்தியானந்தன், மாவட்ட சமுக சேவை உத்தியோகத்தர் எஸ்.எஸ்.வாசன், வெளிக்குளம் ம.வி பாடசாலை அதிபர் கே.பி.கணேஷ், முன்னாள் உப நகர பிதா சந்திரகுலசிங்கம், தமிழ் விருட்சம், வரியிறுப்பாளர் சங்க தலைவர் சந்திரகுமார் (கண்ணன் ) தமிழ் விருட்ச செயலாளர் மாணிக்கம் ஜெகன், உப செயலாளர் சந்திரபத்மன், ரோய் ஜெயக்குமார் ,தேசமான்ய க.சிவஞானம், தேசமான்ய குமாரசாமி, சமுக ஆர்வலர்கள் திருவிளங்கம், யோகா, கருணாநிதி, விக்னா, மணியம், கோபி, கேசவன், நிகேதன், ராஜ்மோகன் சர்மா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மாலை அணிவித்து மலர் தூவி ஒளவைப் பாட்டிக்கு வணக்கம் செய்த பின் உரையாற்றிய தமிழ் மணி அகளங்கன் அவர்கள் தமிழ்ப் பாட்டி ஒளவையார் அவர்கள் பெண் புலவர்களில் முதன்மையானர் என்றும் மகாபாரத்தில் கிருஸ்ணனின் தூது தோற்று யுத்தம் நடைபெற்றது, வீரவாகு தேவர் தூது போயும் முருகனுக்கும் சூரனுக்கும் யுத்தம் இடம் பெற்றது. எனினும் அதியமான், நெடியமான் அரசர்களுக்கிடையில் இடம்பெற இருந்த யுத்தத்துக்கு பெண்ணாக இருந்தும் தூது போய் நிறுத்திய பெருமை உடையவர் ஒளவை பிராட்டி என்றார். அது மட்டும் அல்ல கல்வியின் மகத்துவத்தை உணர்த்தி விழிப்புணர்வு செய்த முதல் ஜனநாயகவாதியும் அவர் என்று நயம் பட உரைத்தார்.
தொடர்ந்து உரையாற்றிய அதிபர் அவர்கள் எமது பாடசாலைக்கு அருகில் ஒளவை பிராட்டியின் சிலை இருப்பதால் அடுத்த வருட நிகழ்வு எமது பாடசாலையில் பல போட்டிகள் வைத்து பரிசளித்து மிக சிறப்பாக செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இறுதியில் சந்திரகுமார் (கண்ணன் ) அவர்கள் தனது நன்றி உரையில் அடுத்த வருடம் சிலையடியில் ஒளவை பிராட்டிக்கு மாலை அணிவித்து வணக்கம் செய்த பின் பாடசாலையில் விழாவாக செய்வதற்க்கு ஒழுங்குகள் செய்வதாக கூறி கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொண்டார்.






