ஸ்ரீசாந்த், சவானின் பிணையை இரத்து செய்ய கோரி மனு!!

345

IPL-Sreesanth

6வது ஐ.பி.எல். சூதாட்ட வழக்கில் டெல்லி பொலிசார் நேற்று குற்றப் பத்திரிகையை சமர்ப்பித்தனர். 6 ஆயிரம் பக்கங்களை கொண்டதாக குற்றப்பத்திரிகை இருந்தது.

நிழல் உலக தாதாக்கள் தாவூத் இப்ராகீம், சோட்டா ஷகீல், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், அஜீத் சண்டிலா, அங்கீத் சவான் உள்பட 39 பேரது பெயர் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளது.

இதில் அஜீத் சண்டிலா உள்பட 9 பேர் இன்னும் சிறையில் தான் உள்ளனர். ஸ்ரீசாந்த், அங்கீட் சவான் உள்பட 21 பேர் பிணையில் விடுதலையாகி உள்ளனர்.

10 பேர் இன்னும் தலைமறைவாக உள்ளனர். இவர்கள் அனைவரும் மீதும் இந்திய தண்டனை சட்டத்தின் பல்வேறு பிரிவுகள் மற்றும் மராட்டிய அமைப்பு ரீதியிலான குற்றதடுப்பு சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த சூதாட்ட வழக்கில் ராஜஸ்தான் ரோயல்ஸ் தலைவர் ராகுல் டிராவிட் மற்றும் அந்த அணியை சேர்ந்த திரிவேதி, ஹர்மித் சிங் ஆகிய 3 பேர் அரசு தரப்பு சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே ஸ்ரீசாந்த், அங்கீத் சவான் உள்பட 21 பேரது பிணையை இரத்து செய்யக்கோரி டெல்லி பொலிசார் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.