தென்னாபிரிக்காவை வீழ்த்தி தொடரை 4-1 என கைப்பற்றிய இலங்கை அணி!!

352

Srilanka

தென்னாபிரிக்காவுக்கு எதிரான 5வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 128 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது.

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணி ஐந்து ஒருநாள் போட்டிகளில் விளையாடியது. இதில் மூன்று போட்டிகளில் இலங்கை அணியும் ஒரு போட்டியில் தென்னாபிரிக்க அணியும் வெற்றி பெற்றிருந்த நிலையில், 5வதும் இறுதியுமான போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் இன்று ஆரம்பமானது.

இதில் இலங்கை அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இலங்கை சார்பாக சிறப்பாக துடுப்பெடுத்தாடிய டில்ஷான் 99 ஓட்டங்களையும், லகிரு த்ரிமானே 68 ஓட்டங்களையும், சங்கக்கார ஆட்டமிழக்காமல் 75 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இறுதியாக இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 307 ஓட்டங்களைக் குவித்தது.

இதன்படி 308 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய தென்னாபிரிக்க அணி 43.5 ஓவர்களில் 179 ஓட்டங்களை மாத்திரமே பெற்ற நிலையில் சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்தது.

இலங்கை அணி சார்பாக சிறப்பாக பந்து வீசிய சுரங்க லக்மால் மற்றும் அஜந்த மெண்டிஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். அத்துடன் சஜித்திர சேனாநாயக்க 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இலங்கை அணி 4-1 எனக் கைப்பற்றியுள்ளது.

இன்றைய போட்டியின் நாயகனாக திலகரட்ன டில்ஷானும் தொடரின் நாயகனாக சங்ககராவும் தெரிவுசெய்யப்பட்டனர்.