வவுனியா வடக்கு கல்வி வலயத்தில் 150க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பற்றாக்குறை காணப்படுவதோடு, 10 பாடசாலைகள் ஒரு அதிபர் அல்லது ஒரு ஆசிரியருடன் இயங்கி வருகின்றன. குறித்த கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலைகளில் ஆரம்ப பிரிவிலிருந்து க.பொ.த.உயர்தரம் வரை கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் பாட ஆசிரியர்கள் உள்ளடங்கலாக 150 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவி வருகின்றது.
வவுனியா வடக்கு கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலைகளின் மாணவர்களும், கிராம மக்களும் முற்றுமுழுதாக போரினால் பாதிக்கப்பட்டவர்கள். போரால் இடம்பெயர்வை சந்தித்து வறுமை நிலைக்குட்பட்டவர்கள்.
எனவே இந்த கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலைகளில் நிலவிவரும் ஆசிரியர் ஆளணி பற்றாக்குறையை நிவர்த்திசெய்ய மாகாண கல்வி அமைச்சும், வலயக்கல்வி பணிமனையும் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கனகராயன்குளம் ஆரம்ப பாடசாலைக்கான புதிய வகுப்பறைக் கட்டட திறப்பு விழாவில் கலந்துகொண்டு, கட்டத்தை திறந்துவைத்த வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ந.சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.
கனகராயன்குளம் ஆரம்ப பாடசாலையில் இதுவரை காலமும் 80 மாணவர்கள் மிகவும் இடவசதி குறைந்த தற்காலிக வகுப்பறை கொட்டகைகளில் தமது கல்வியை பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் கற்று வந்தனர்.
தற்பொழுது சகல வசதிகளுடனும் கூடிய புதிய வகுப்பறை கட்டடம் ஒன்றை அமைத்து மாணவர்களின் மகிழ்ச்சியான கற்றல் செயற்பாடுகளுக்கு வடக்கு மாகாண கல்வி அமைச்சு உரிய நடவடிக்கை எடுத்துள்ளமை வரவேற்கப்பட வேண்டிய விடையம் ஆகும் எனவும் ஆனந்தன் எம்.பி தெரிவித்தார்.
தமது பாடசாலை கட்டடம் ஒன்றின் கூரை மரங்களையும், ஓடுகளையும், ஜன்னல் கதவுகளையும் இனந்தெரியாதோர் கழற்றி களவாடிச்சென்றுள்ளதால், அந்த கட்டடத்தை புனரமைத்து தந்தால் அதனை கணிணி பயிற்சி அறையாக பயன்படுத்த முடியும் என்று பாடசாலை அதிபர் திரு.பாலகிருஸ்ணன் விடுத்த வேண்டுகோளை ஏற்று, தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியூடாக குறித்த கட்டத்தை புனரமைத்து தருவதாகவும் ஆனந்தன் எம்.பி தெரிவித்தார்.
லண்டனில் வசித்துவரும் கனகராயன்குளம் மகாவித்தியாலயத்தின் பழைய மாணவன் தியாகராசா திவாகரன், நான்கு கணினிகளை அவரது பெற்றோர் ஊடாக கனகராயன்குளம் ஆரம்ப பாடசாலை அதிபர் திரு.பாலகிருஸ்ணனிடம் இன்றைய நிகழ்வின் போது வழங்கி வைத்தார்.
கனகராயன்குளம் ஆரம்ப பாடசாலை அதிபர் திரு.பாலகிருஸ்ணன் தலைமையில் 29.01.2016 அன்று நடைபெற்ற புதிய வகுப்பறை கட்டடத்தை திறந்துவைக்கும் நிகழ்வில் வடக்கு மாகாணசபை உறுப்பினர் ம.தியாகராசா, வலயக்கல்வி பணிப்பாளர் திரு.சிறீஸ்கந்தராசா, முன்னாள் கோட்டக்கல்வி பணிப்பாளர் திரு.விநாயகமூர்த்தி, முன்னாள் உதவிக்கல்வி பணிப்பாளர் திரு.இராஜேஸ்வரன், நெடுங்கேணி பிரதேசசபையின் முன்னாள் உபதவிசாளர் தணிகாசலம், முன்னாள் கிராம சேவையாளர் திரு.தியாகராசா, பிரதி கல்வி பணிப்பாளர், அயல் பாடசாலைகளின் அதிபர்கள் ஆசிரியர்கள், கிராம சேவையாளர், ஆசிரிய ஆலோசகர்கள், பாடசாலையின் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.






