வவுனியாவில் இன்று (05.02.2016) காலை மூன்றுமுறிப்பு பகுதியில் இலங்கை போக்குவரத்துச் சபை பேரூந்து மீது கல் வீசி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்..
ஏறாவூர் இ.போ.ச. சாலைக்குச் சொந்தமான பேரூந்து கல்முனையிலிருந்து வவுனியா நோக்கிச் சென்று கொண்டிருக்கும் போது இன்று காலை 9 மணியளவில் வவுனியா மூன்றுமுறிப்புப் பகுதியில் வைத்து இனந்தெரியாத இரண்டு நபர்கள் மோட்டார் சைக்கிலில் வந்து பேரூந்தின் முன்பக்க கண்ணாடி மீது கல் வீசி தாக்குதல் மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் அச்சமயம் பேரூந்தில் 15 முதல் 20வரையான பயணிகள் பயணம் செய்துள்ளதாகவும் எனினும் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் பேரூந்தின் நடத்துனர் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக வவுனியா இ.போ.ச. சாலை ஊடாக பொலிசாருக்குத் தகவல் வழங்கியுள்ளதாகவும் மேலதிக விசாரணையினை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றதாகவும் தெரிவித்தார்.
இவ்வருடம் தைப் பொங்கல் தினத்தன்று வவுனியா இ.போ.ச. சாலைக்குச் சொந்தமான பேரூந்து மிகிந்தலைப்பகுதியில் வைத்து கல் வீசி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.






