வவுனியா நகரசபையில் நேற்று (07.02.2016) மதியம் மன்னாரில் இருந்து விளையாடுவதற்காக வந்த இளைஞர் குழு ஒன்று பெரும் அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளது. இச் சம்பவம்பற்றி தெரியவருவதாவது..
வவுனியா நகரசபையிடம் அனுமதி பெறாமல் விளையாட வந்த மன்னார் இளைஞர் குழு ஒன்று நகரசபை மைதானத்திற்குள் அத்துமீறி பிரவேசித்ததுடன் அங்கு விளையாடிக்கொண்டிருந்த இளைஞர்களின் துடுப்பு மட்டையை எடுத்துச்செல்ல முற்பட்டனர். அதை அங்கு விளையாடிய இளைஞர்கள் தடுத்து நிறுத்த முற்பட்டபோது அந்த இளைஞர்களை மன்னார் இளைஞர்கள் தாக்கியதுடன் நகர சபையினுள் நின்ற சில வாகனங்களுக்கு சேதமேற்படுத்திய பின்னர் தப்பிச்சென்றுள்ளனர்.
அதன் பின்னர் தகவல் அறிந்து அவ்விடம் விரைந்து வந்த நகரசபை செயலாளர் தர்மேந்திரா பொலிஸாருக்கு முறைப்பாடு செய்ததை அடுத்து உடன் விரைந்த பொலிஸார் தப்பிச்சென்றவர்களை பறையநாளங்குளம் பகுதியில் கைது செய்து வவுனியாவிற்கு அழைத்து வந்தனர்.
அதன் பின் சேதமாக்கப்பட்ட வாகனங்களுக்கு நஷ்டஈடு தருவதாக இவ் இளைஞர்கள் வாக்குறுதிஅளித்ததால் எச்சரிக்கை செய்து விடுவிக்கப்பட்டனர்.






