இலங்கைத் திருநாட்டின் வடபால் நீர் வளமும் நிலவளமும் நிறைந்த வன்னிப் பெருநிலப்பரப்பின் தலைவாசலாய் பண்டார வன்னியன் காலத்து புராதன நகராய் சைவமும் தமிழும் தழைத்தோங்கும் புண்ணிய நகராய் விளங்கும் வவுனியா மண்ணில் இருபதாம் நூற்றாண்டின் பழமையுடன் திகழும் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயம் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு பஞ்சதள இராஜ கோபுரம் சிற்பவேலைப்பாடுகள் வர்ண வேலைப்பாடுகள் சகிதம் கோடி சூரிய பிரகாசத்துடன் காட்சி தர ஆலய உட்பிரகார வேலைகள் சிறப்புற நிறைவு பெற்று,
அழகுற வர்ணம் தீட்டப்பட்டு நிகழும் மங்களம்மிகு மன்மத வருடம் தைத்திங்கள் 27ஆம் நாள் இன்று புதன்கிழமை(10.02.2016) துதியை திதியும் சதய நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய காலை 9.00 மணிமுதல் 10.30 மணிவரையான மீனலக்கின சுபவேளையில் ஸ்ரீகந்தசுவாமிப் பெருமானுக்கும், விநாயகர், சண்முகபெருமான், தட்சணாமூர்த்தி, சந்தான கோபாலர், மகாலட்சுமி, சனீஸ்வரர், வைரவர், சண்டேஸ்வரர் ஆகிய பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிசேகம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
பல சிவாச்சாரியார்கள் ஒன்றிணைந்து மிகச் சிறப்பாக சப்ததச (17) குண்ட மஹா கும்பாபிஷேக நிகழ்வுகளை நடாத்தினர். இன் நிகழ்வுகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து சிறப்பித்தனர்.