வவுனியாவிலிருந்து வெளிவந்துகொண்டிருக்கும் குறும்படங்கள் வரிசையில் விஞ்ஞான பாட ஆசிரியரும் இயக்குனருமாகிய புவிகரனின் இயக்கத்தில் வவுனியா குட்செட் வீதியில் அமைந்துள்ள “புகழ் FM” நிறுவனரும் பணிப்பாளருமாகிய இராஜேஸ்வரனின் விருப்பில் அக் கட்டடத் தொகுதியின் ஒன்றுகூடல் மண்டபத்தில் வட்டம் குறும்படம் நேற்று (14.02.2016) வெளியிடப்பட்டது.
பிரதான நடிகர்களாக இளம் நடிகர் துஷாந், கலைஞர் மாணிக்கம் ஜெகன், ஆசிரியர் பிரியா செல்வராஜா, அறிவிப்பாளர் நாகராஜா, அறிவிப்பாளர் ஜோகா, ஆகியோர் நடிக்க, மறைமுக குரல்வளி பாத்திரங்களும் பங்கேற்றிருந்தன.
மேற்படி நிகழ்வில் பிரதம விருந்தினராக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கலந்து கொண்டார்.
மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமாகிய நிகழ்வினை அறிவிப்பாளர் ஜோகா தொகுத்து வழங்க வரவேற்புரையினை மாணிக்கம் ஜெகன் வழங்க.. “புவிகரனின் சாதனைத் தடங்கள்” எனும் வீடியோ கிளிப்ஸ் காண்பிக்கப்பட்டது.
தொடர்ந்து வட்டம் வெளியிட்டதன் பின், அதற்கான “வட்டம் ஒரு பார்வை” எனும் தலைப்பில் விமர்சன உரையினை வே.முல்லைத்தீபன் நிகழ்த்தினார்.
தொடர்ந்து சிறப்புரையினை தமிழ் மாமன்ற மேல்சபை உறுப்பினரும் மருத்துவக் கலாநிதியுமாகிய கவிஞர் மதுரகன் நிகழ்த்தினார்.
கருத்துரைகள் வரிசையில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வவுனியா தமிழ் விருட்சம் நிறுவனர் கண்ணன் மற்றும் மகேந்திரன், ஈழத்து நடிகர் சுபாஷ் போன்றோர் வழங்கினர்.
இறுதியில் புவிகரனின் ஏற்புரையுடன் வெளியீடு நிறைவு கண்டது.
வட்டம் ஒரு பார்வை
வட்டம் ஒன்றுக்கு எவ்வாறு மையம் ஒன்று இருக்குமோ.. அதுபோல் இதன் மையக்கரு இதுதான்.. அதாவது கலியாண புரோக்கர் மூலமாக ஊர்ப் பிள்ளை ஓன்றுக்கு வெளிநாட்டு மாப்பிள்ளையை பேசி திருமணம் நடக்கிறது. பிறகு மாப்பிள்ளையின் மகன் வெளிநாட்டிலிருந்து பேசுகிறான். மாப்பிள்ளை சென்ற விமானம் காணாமல் போகிறது.
நடிப்புக்கள் பிரமாதம். நடிகர் தெரிவும் அதற்கேற்ற காட்சியமைப்புக்களும்.. பின்னணி இசையும் சாலப் பொருந்தியுமிருக்கிறது.
ஆக..
01. கலியாணப் புரோக்கர்கள் எல்லோருமே ஏமாற்றுபவர்களா..?
02. வெளிநாட்டு மாப்பிள்ளைகள் எல்லோரும் இங்கு இரண்டாம் தாரமாகத்தான் திருமணம் செய்கிறார்களா..?
03. புரோக்கர்.. மாப்பிள்ளையின் நண்பன்.. போன்றோருக்கு இவ் ஏமாற்று வித்தை தெரியும் என்பதனூடாக.. பலர் சேர்ந்தே இப்பேற்பட்ட விடையங்களுக்கு ஆதரவு கொடுக்கிறார்கள் என்பதையும் கோடிட்டு காட்டுகிறாரா..?
ஆக..
காலத்தின் கண்ணாடியே இப் படைப்பு என்பதால்.. இயக்குனர் தனது விருப்பு வெறுப்புக்களை சமுதாயக் கொள்கை மீது திணிக்காமல்.. எம் சார் சமூகத்தில் இப்படியும் நடக்கிறது என்பதையும்.. இப்பேற்பட்ட ஏமாற்று பேர்வளி இருப்பதை விட இறப்பது மேல் என்பதையும்.. வட்டத்தினூடாக நிறுவியுள்ளார் எனலாம்.
வாழ்த்துக்கள் வட்டத்திற்கு.
-நன்றி முல்லைத்தீபன்-






