வவுனியாவில் வரும் புதன்கிழமை பூரண கர்த்தால் : அனைவரையும் ஒத்துழைப்பு வழங்குமாறு வேண்டுகோள்!!

1455

vavuniya

வவுனியா உக்குளாங்குளத்தில் கடந்த 16.02.2016 அன்று வன்புணர்வின் பின்னர் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்ட மாணவி கரிஸ்ணவியின் கொலையை கண்டித்து வவுனியாவில் பாரியளவில் தொடர் போராட்டங்களை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சமூக வன்முறைக்கு எதிரான மக்கள் அமைப்பு ஏற்பாடு செய்துள்ள இப் போராட்டத்தில் செவ்வாய்கிழமை அரசியல் கட்சிகள், மகளிர் அமைப்புகள், கிராம அபிவிருத்திச் சங்கங்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் உட்பட பொது மக்கள் ஒன்றிணைந்து காலை 9 மணியளவில் காமினி மாகாவித்தியாலயத் திற்கு முன்பாக இருந்து போரணியாக மாவட்ட செயலகத்திற்கு சென்று குற்றவாளிகளை கைது செய்யக் கோரியும் அவர்களுக்கு உடனடியாக தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் ஜனாதிபதி மற்றும் பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பி வைக்கும் வகையில் வவனியா அரசாங்க அதிபரிடம் மகஜர் கையளிக்கப்படவுள்ளது.

அத்துடன் செவ்வாய்க்கிழமை (23.02.2016) காலை 10.00 மணி தொடக்கம் 11.00 மணிவரை படுகொலை செய்யப்பட்ட மாணவிக்காக அனைத்து பாடசாலை மாணவர்களையும் அவர்களின் பாடசாலைகளில் கவனயீர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மறுநாள் புதன்கிழமை (24.02.2016) வவுனியா மாவட்டம் முழுவதும் பூரண கர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இப் பூரண கர்த்தாலுக்கு அனைத்து அரசியல் கட்சிகள், சிவில் சமூக பொது அமைப்புக்கள், மகளிர் அமைப்புக்கள், அரச, அரச சார்பற்ற அமைப்புக்கள், முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கம், வர்த்தக சங்கம், வவுனியா பிரஜைகள் குழு, யாழ் பல்கழைக்கழக வளாகம், வவுனியா விவசாயக் கல்லூரி, தேசிய கல்வியல்க் கல்லூரி, வவுனியா தொழில்நுட்பக் கல்லூரி, தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் ஆகிய அமைப்புக்களை ஆதரவு தரும்படி ஏற்பாட்டுக்குழுவினர் கேட்டுள்ளனர்.