வவுனியா உக்குளாங்குளத்தில் வன்புணர்வின் பின்னர் கொலை செய்யப்பட்ட மாணவி கரிஸ்ணவியின் கொலையுடன் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவரை எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு வவுனியா நீதிவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.
வவுனியா உக்குளாங்குளத்தில் சைக்கிள் திருத்தும் நிலையமொன்றினை வைத்திருந்த அயல் வீட்டுக்காரர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்ட நிலையில் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இந் நிலையில் இது தொடர்பில் தெரிவித்த பொலிஸார்,
நாம் இச் சம்பவத்தை சாதாரண முறைப்படி விசாரணை செய்து சந்தேக நபரை கைது செய்துள்ளோம். அவ்வாறு விசாரணை செய்யப்பட்ட நபரிடம் சந்தேகப்படும்படியான பல கருத்துக்களைப் பெற்றே தற்போது கைது செய்துள்ளோம்.
சிலர் தாயை சந்தேகம் எனக் கூறுகின்றனர். எனினும் அவ்வாறு எதுவும் இல்லை. அத்துடன் இச் சிறுமியும் எவரையும் காதலிக்கவும் இல்லை என்பதும் எமக்கு தெரியவந்துள்ளதுடன் களவெடுக்கும் நோக்கோடும் எவரும் இவ் வீட்டிற்குள் செல்லவும் இல்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந் நிலையில் கைது செய்யப்பட்டவரை எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.






