வவுனியா கல்வாரிக்கான பாதயாத்திரை மன்னாரில் இருந்து ஆரம்பம்!!

783

Kalvari

வருடா வருடம் மன்னார் மறைமாவட்டத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு மேற்கொள்ளப்பட்டு வந்த வவுனியா கோவரசங்குளம் கல்வாரிக்கான பாதயாத்திரை இம்முறை பொது நிலையினரினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த பாதயாத்திரை நேற்று புதன்கிழமை காலை ஆரம்பமாகியுள்ளது

கத்தோலிக்கர்கள் வருடந்தோறும் அனுசரித்து வரும் தவக்காலத்தை முன்னிட்டு மன்னார் மறை மாவட்டத்தைச் சேர்ந்த கத்தோலிக்கர்கள் வவுனியாவில் உள்ள கோமரசன்குளம் கல்வாரிக்கு பாதயாத்திரை செல்வது வழமை. மன்னார் மறைமாவட்டம் இன்றி வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த கத்தோலிக்கர்களும் கலந்து கொள்வார்கள்.

கடந்த காலங்களில் குறித்த பாதயாத்திரையினை மன்னார் மறைமாவட்ட அருட்பணியாளர்களினால் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது. ஆனால் இம்முறை பொது நிலையினரினால் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நேற்று புதன்கிழமை மன்னாரில் இருந்து ஆரம்பமான குறித்த பாதயாத்திரையில் மன்னார் மறைமாவட்டத்தைச் சேர்ந்த பல நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பாதயாத்திரையாக செல்லும் பக்தர்கள் பெரியகட்டு புனித அந்தோனியார் ஆலயம், வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயம் ஆகியவற்றில் தங்கி நாளை வெள்ளிக்கிழமை அதிகாலை வவுனியா கோமரசன்குளம் கல்வாரியை நோக்கி சென்றடைவார்கள்.

அங்கு நாளை வெள்ளிக்கிழமை நடைபெறும் திருச்சிலுவைப் பாதை மற்றும் திருப்பலியிலும் கலந்து கொள்வார்கள்.

வவுனியா கோமரசன்குளம் கல்வாரிக்குச் செல்லும் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, மருத்துவ வசதிகள், குடிநீர், உணவு வசதிகள் போன்றவை ஏற்பாட்டுக் குழுவினரினால் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.