அதிகரித்துவரும் சிறுவர் துஸ்பிரயோகத்தை கட்டுப்படுத்த வவுனியாவில் விசேட செயலணி இன்று (04.03.2016) உருவாக்கப்பட்டது.
வவுனியா மாவட்ட செயலகத்தில் வடமாகாண சிறுவர் பாதுகாப்பு, நன்னடத்தை அமைச்சர் ப.சத்தியலிங்கம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திலேயே இச் செயலணி உருவாக்கப்பட்டது.
இதன்போது வவுனியா மாவட்டத்தில் அண்மைக்காலமாக சிறுவர் துஸ்பிரயோகம் அதிகரித்தமைக்குரிய காரணங்கள், அதனைத் தடுக்க மேற்கொள்ளக் கூடிய பொறிமுறைகள், மற்றும் துஸ்பிரயோகத்திற்குள்ளானவர்களின் மறுவாழ்வு உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து துறை சார்ந்தவர்களின் ஆலோசனைகள், கருத்துக்கள் பெற்றுக் கொள்ளப்பட்டது.
அதனடிப்படையில் பல்வேறு தரப்பினரையும் உள்ளடக்கி மாவட்டமட்ட செயலணி அமைக்கப்பட்டது. ஏற்கனவே இது தொடர்பில் அரச அதிபரின் கீழ் ஒரு செயலணி செயற்பட்டமையால் அதனை இதன்போது மீள்புனரமைப்பு செய்து வலுவுள்ள செயலணியாக மாற்றப்பட்டது.
இந்த கூட்டத்திற்கு வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சாந்தி சிறிஸ்கந்தராஜா, மாகாண சபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், எம்.பி.நடராஜா, மாவட்ட அரசாங்க அதிபர் ரோஹண புஸ்பகுமார, பொலிஸ் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், துறைசார் திணைக்களங்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், மதத்தலைவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.






