அகில இலங்கை சைவ மகா சபையால் மகா சிவராத்திரி நிகழ்வை முன்னிட்டு சைவத்தமிழ் இளைஞர் மாநாடு ஒன்றினை வவுனியா கோவிற்குளம் சிவன் கோவிலில் பங்குனி 06,07 ஆந் திகதிகளில் நடாத்த உள்ளது.
இம் மாநாடானது அகில இலங்கை சைவ மகா சபை தலைவர் சிவத்திரு.சி.சோதிமூர்த்தி தலைமையில் இடம்பெற உள்ளது.பிரதம விருந்தினராக கௌரவ மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினரும்,கிழக்கு இலங்கை இந்து இளைஞர் பேரவைத் தலைவருமான சிவத்திரு.சீ,யோகேஸ்வரன் கலந்து கொள்கிறார். சிறப்பு விருந்தினர்களாக அரச அதிபர்-யாழ்ப்பாணம் திருமிகு.நா.வேதநாயகன், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திருமிகு.இ.இரவீந்திரன், பணிப்பாளர்-இந்துக் கலாச்சார திணைக்களம் திருமிகு உமா மகேஸ்வரன் என்பவர்களும் கௌரவ விருந்தினர்களாக தலைவர்-மானிடம் அறக்கட்டளை திருமிகு.இ.செல்வநாயகம், அமைப்பாளர்-சர்வதேச இந்து இளைஞர் சங்கம் திருமிகு நா.குமரகுருபரன், ஓய்வுநிலை மக்கள் வங்கி பிராந்திய முகாமையாளர் திருமிகு.சி.பத்மநாதன் என்பவர்களும் பங்கு கொண்டு சிறப்பிக்கின்றனர்.
நல்லை திருஞான சம்பந்த ஆதினம் தவத்திரு ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளின் ஆசியுடன் இடம் பெறுவது சிறப்பானதாகும். அத்துடன் மேலும் பல குருமுதல்வர்;களின் அருளாசியுடன் இம் மாநாடு இடம் பெறவுள்ளது. மாநாட்டிற்கு முன்னதாக சைவ மகா சபையின் வவுனியா மாவட்ட சிவதொண்டர் அமைப்பினால் ஒழுங்குபடுத்தப்பட்ட ஆன்மீக நடை பவணி வவுனியா வேப்பங்குளம் ஞானவைரவர் திருக்கோவிலில் இருந்து கோவிற்குளம் அகிலாண்டேஸ்வரர் (சிவன்) திருக்கோவில் வரை இடம்பெறும்.
இம் மாநாட்டில் யாழ்ப்பாணம், வன்னி, மலையகம், கிழக்கு பிராந்தியங்களின் இணைப்பாளர்கள் செயற்றிட்டங்கள் தொடர்பான அறிக்கைகளும் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படுகின்ற செயற்றிட்டங்கள் தொடர்பான ஆய்வுகளும் இடம்பெறும். மாநாட்டின் நிறைவுடன் வவுனியா கோவிற்குளம் சிவன் ஆலயத்திலிருந்து ஊர்திகள் சகிதம் திருக்கேதிச்சரத்திற்கு மகா சிவராத்திரி ஆன்மீக பயணமும் இடம்பெறும்.