வவுனியாவில் மூன்று வருடங்களாக மின்சாரம் வழங்கப்படாமல் புறக்கணிக்கப்படும் கிராமத்தின் சோகக் கதை!!

972

 
வவுனியா மாவட்டத்தில் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அனந்தர்புளியங்குளம் கிராமத்திற்கு வடக்கின் வசந்தம் திட்டத்தின் மூலம் மின்சாரம் வழங்குவதற்கான திட்டம் ஆரம்பித்தும் அதிகாரிகளின் அசமந்தப் போக்கு காரணமாக 3 வருடங்களாக தமக்கு மின்சாரம் வழங்கப்படவில்லை என அனந்தர்புளியங்குளம் மக்கள் தெரிவிக்கின்றனர்.

eV_1 001

இது தொடர்பாக வவுனியாவின் முன்னாள் அரச அதிபர் பந்துல ஹரிச்சந்திர அவர்களுக்கு கமக்காரர் அமைப்பு கடிதம் மூலம் தெரிவித்ததுடன், பந்துல ஹரிச்சந்திர அவர்களால் வடக்கின் வசந்தம் திட்ட முகாமையாளருக்கு கடந்த 24.04.2015 அன்று இக் கிராமத்திற்கு மின்சாரத்தை வழங்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு கடிதம் எழுதியுள்ளார்.

 ev3 001

இதனைத் தொடர்ந்து கடந்த 04.06.2015 அன்று மாவட்ட திட்டமிடல் பணிப்பாளரால் கமக்காரர் அமைப்பிற்கு கடிதம் ஒன்று எழுதப் பட்டுள்ளது. இக் கடிதத்தில் வடக்கின் வசந்தம் திட்ட முகாமையாளரை தான் தொடர்புகொண்டு கேட்டபோது மின்சார இணைப்பு வேலையை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்களின் காலதாமதத்தால் மின்சாரம் வழங்கப்படவில்லை எனவும், ஓரிரு மாதங்களுக்குள் மின் திட்டம் முழுமையாக வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

ev4 001

இருப்பினும் அவர் தெரிவித்து 8 மாதங்கள் கடந்துள்ள நிலையிலும் இக் கிராம மக்களுக்கு மின்சாரம் வழங்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து கமக்காரர் அமைப்பு இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு இப் பிரச்சனை தொடர்பாக கடந்த 07.03.2016 கடிதம் ஒன்றை எழுதியுள்ளதுடன்,

President 001

அரசு வழங்கிய மின்சாரத்தை கடந்த 3 வருடங்களாக வழங்காது மக்களின் அடிப்படை உரிமையை மீறிக்கொண்டிருக்கும் ஒப்பந்ததாரர், திட்ட பொறியியலாளர், திட்ட முகாமையாளர், ஆகியோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியுமா என மனித உரிமை ஆணைக்குழுவைக் கேட்டு கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளனர்.

Human_Rights 001

இது தொடர்பாக ஊடகங்களுக்கு அனந்தர்புளியங்குளம் கமக்காரர் அமைப்பு அனுப்பியுள்ள கடிதத்தில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்டத்தில் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் அனந்தர்புளியங்குளம் கிராமசேவகர் பிரிவில் (223A) அனந்தர்புளியங்குளம் எனும் பெயரில் அமைந்துள்ளதே எமது கிராமமாகும். இது பாரம்பரிய விவசாயக்கிராமமாக இருந்தபோதிலும் போரினால் மிகவும் பாதிப்படைந்த கிராமமாக காணப்படுகின்றது.

எல்லைக்கிராமமாக இருக்கின்றபடியினால் 1990 களில் இருந்தே அடிக்கடி இடம் பெயர்வுகளை சந்தித்த இக்கிராமம் 1997 இல் நடைபெற்ற ‘ஒப்பரேசன் ஜெயசிக்குறு‘ மூலம் பாரிய அழிவைச்சந்தித்தது அன்று இடம்பெயர்ந்த மக்கள் சுமார் 7 வருடங்களுக்கு பின்னர் 2004-2005 காலப்பகுதியில் மீளக்குடியேறினர்.

எனினும் மீன்டும் விரைவாக ஆரம்பித்த போரினால் 2008 இல் இடம் பெயர்ந்தவர்கள் 2010 இல் பாரிய அழிவுக்கு பின்னர் சிறிது சிறிதாக குடியேறிக் கொண்டிருக்கின்றனர். நீண்டகால இடப்பெயர்வினால் இங்கு வசித்த பலர் இலங்கையின் பல பாகங்களிலும் வெளிநாட்டிலும் குடியேறி விட்ட போதும் போரின் வடுக்களில் இருந்து தன்னை வடுவித்துக்கொள்ள கடுமையாக இக்கிராமம் கடுமையாக முயற்சிசெய்கின்றது. இந்த கிராமத்திற்கு அடிப்படை வசதிகளான மின்சார வசதியோ, போக்குவரத்து வசதியோ, வீதியோ இதுவரை கிடைக்கவில்லை.

கடந்த 2014 ஆம் ஆண்டு இந்த கிராமத்திற்கான மின்சார வசதிகள் ஏற்படுத்தும் திட்டம் வடக்கின் வசந்தத்தின் கீழ் அரசினால் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் இதுவரை இந்தத் திட்டம் பூர்த்தி செய்யப்படவில்லை. பிரதேச செயலாளர் உட்பட எந்த அரச அதிகாரிகளும் இது குறித்து அக்கறையற்றவர்களாகவே காணப்படுகின்றனர். வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழான மின்விநியோக அலுவலகத்திற்கு பலமுறை சென்ற எங்களை அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை.

ஒரு நாட்டின் முதுகெலும்பாக விளங்குவது கிராமங்களே என்ற உண்மை விளங்காத அதிகாரிகள் இருக்கும் வரை கிராமத்து மக்கள் எல்லாவற்றையும் போராடித்தான் பெறவேண்டும் என்பதை இச் சம்பவம் எடுத்துக் காட்டுகின்றது. இக் கிராம மக்களின் கடின உழைப்பினால் இலங்கை பெருமளவு அன்னியச் செலாவணியை ஈட்டி வருவது குறிப்பிடத்தக்கது. இங்கு உற்பத்தி செய்யப்படும் பழங்கள் உள்ளூரிலும் வெளிநாடுகளிலும் விற்பனை செய்யப்படுகின்றது.

இம் மக்கள் பின்வரும் விடைதெரியாத வினாக்களுடன் இருளில் தவிக்கின்றனர். ஒளி பெறுமா இவர்களின் வாழ்க்கை?

01. இந்த கிராமத்திற்கு இது வரை மின்சார வசதி ஏன் பூர்த்தி செய்யப்படவில்லை?
02. கால தாமதத்திற்கு ஒப்பந்தகாரர் தான் காரணமெனின் ஒப்பந்தகாரர் கறுப்புப் பட்டியலிடப்பட்டு வேறு ஒப்பந்தகாரர் மாற்றப்படாதது ஏன்?
03. இதுவரை இத்திட்டம் மேற்பார்வை செய்யப்படாதது ஏன்?
04. ஒப்பந்த காரருக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?
05. இதில் ஏதாவது ஊழல் நடைபெற்று இருக்கிறதா?
06. அரச அதிகாரிகளை விட ஒப்பந்த காரர் அதிகாரம் மிக்கவரா ?
07. மக்களுக்கு தேவையான, நியாயமான அடிப்படை வசதிகளை போராடித்தான் பெற வேண்டுமா?
08. மாகாணசபை நடவடிக்கை எடுக்காதது ஏன்?
09. இந்த மின்சார விநியோக திட்டம் கணக்காய்வுக்கு உட்பட்டதா?

என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Media_1 001Media_2 001

மேலும் இது குறித்து தெரிவித்த மக்கள், பிரதேச செயலாளர் உட்பட எந்த அரச அதிகாரிகளும் இது குறித்து அக்கறையற்றவர்களாகவே காணப்படுகின்றனர். வடக்கின் வசந்த திட்டத்தின் கீழான மின்விநியோக அலுவலகத்திற்கு பலமுறை சென்ற எங்களை அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. இதற்கு பொறுப்பான பொறியியலாளரை பலமுறை நேரில் சென்று கேட்ட போதும் அவர் இன்று, நாளை என நாட்களை கடத்திக்கொண்டே போகின்றார்.

இவரின் பொறுப்பற்ற நடவடிக்கையாலும், நிர்வாகத்திறன் அற்ற போக்கினாலும் ஏமாற்றமடைந்த நாங்கள் அடுத்து இவ்விடயம் தொடர்பாக அரசாங்க அதிபரை 4 தடவைகள் சந்தித்து எமது மின்சார விநியோகத்தை பெற்றுத்தர எழுத்து மூலமான கோரிக்கையைக் கமக்காரர் அமைப்பினூடாக விடுத்தபோதும், அவர்கள் மேற்படி திட்ட முகாமையாளரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கதைத்துவிட்டு இந்த திகதி முடிவடையும் அந்த திகதி முடிவடையும் என கடிதங்களை வழங்கினர்.

எனினும் விவசாயிகளாக இருக்கின்ற ஒரே காரணத்தினால் எமக்கு இது வரை மின்சாரா வசதியை ஏற்படுத்தி தர எவரும் முன்வரவில்லை.
இதனிடையே கிராமத்திற்கு வருகை தந்த இலங்கை மின்சார சபையினர் தாம் வீடுகளுக்கு மின்சார வசதியை தருவதற்கு தயாராக இருப்பதாகவும், வடக்கின் வசந்த மின்சார விநியோக அலுவலகம் தான் அக்கறை இல்லாது இருப்பதாகவும் இக் கால விரயத்தால் மக்களுக்கு கிடைக்கவேண்டிய பல சலுகைகளும், பயன்களும் அற்றுப்போவதாகவும் சுட்டிக்காட்டிச் சென்றனர்.

வடக்கின் வசந்தம் திட்டத்தின் திட்ட முகாமையாளர் திட்ட பொறியியலாளரையும், திட்ட பொறியியலாளர் ஒப்பந்த காரரரையும் காரணம் காட்டி எமது அடிப்படை வசதியான மின்சார வசதியை எமக்கு கிடைக்கவிடாது தடுத்து வருகின்றனர். எனவே இந்த விடயத்தை தங்களது மேலான கவனத்திலெடுத்து எமது கிராமத்திற்கான மின்சார வசதியை ஏற்படுத்தித் தந்து எமது மக்களின் வாழ்கை சிறப்புற உதவுமாறு தயவுடன் கேட்டுக்கொள்கின்றோம் என்று தெரிவித்தனர்.

இம் மக்கள் மின்சாரத்தைப் பெறுவதற்காக கடந்த 3 வருடங்களாக போராடி வருகின்றனர். உரிய அதிகாரிகளே, வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களே, வடமாகாண சபை உறுப்பினர்களே இது உங்களின் கவனத்திற்கு.

DSC04381 DSC04382 DSC04384 DSC04385 DSC04387 DSC04391 DSC04391_1 DSC04393 DSC04395 DSC04396 DSC04398